லியான்ஸ்: இண்டர்போல் எனப்படும் சர்வதேச போலீஸ் அமைப்பின் தலைவராக தென் கொரியாவின் கிம் ஜோங் யாங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சர்வதேச நாடுகளில் நடைபெறும் குற்ற சம்பவங்களை தடுக்கும் விதமாக இண்டர்போல் எனப்படும் சர்வதேச போலீஸ் அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பின் தலைமையகம் பிரான்ஸ் நாட்டின் லியான்ஸ் நகரில் உள்ளது.
இந்த அமைப்பின் தலைவராக இருந்த சீனாவைச் சேர்ந்தவரான மெங் ஹோங்வெய், சில நாட்களுக்கு முன்னர் சீனாவில் சொந்த ஊருக்கு சென்ற போது திடீரென மாயமானர். பின்னர் லஞ்சம் பெற்ற புகாரில் அவர் கைது செய்யப்பட்டதாகவும், அவர் தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டதாகவும் பின்னர் சீன அரசு விளக்கம் அளித்தது.
இதனையடுத்து இண்டர்போல் துணைத் தலைவராக இருந்த ரஷ்யாவின் அலெக்சாண்டர் புரோகோப்சக் தலைவர் பதவிக்கான போட்டியில் களமிறங்கினார். அவருக்கு எதிராக தென் கொரியாவின் கிம் ஜோங் யாங் என்பவர் போட்டியிட்டார். அவருக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் ஆதரவளித்தன.
இந்நிலையில் இண்டர்போல் அமைப்பின் தலைவராக தென் கொரியாவின் கிம் ஜோங் யாங் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.