அதிகாரப் போட்டியால் இலங்கையில் அரசியல் குழப்பங்கள் நீடித்து வரும் நிலையில், அந்நாட்டு நாடாளுமன்றம் வெள்ளிக்கிழமை மீண்டும் கூடுகிறது.
முதல் அலுவலாக, நாடாளுமன்றத்தை வழிநடத்துவதற்கு அனைத்துக் கட்சிகளையும் கொண்ட சிறப்புக் குழுவுக்கான பிரதிநிதிகள் நியமிக்கப்படவுள்ளனர்.
இலங்கையில் பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கவை நீக்கி விட்டு அவருக்குப் பதிலாக, ராஜபட்சவை பிரதமராக அதிபர் சிறீசேனா நிமியத்தார்.
ராஜபட்ச பிரதமராக நியமிக்கப்பட்டதற்கு எதிராக இலங்கை நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் கீழ் இரு முறை குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த முடிவை ஏற்க அதிபர் சிறீசேனாவும், ராஜபட்சவும் மறுத்துவிட்டனர். பிரதமர் பதவிக்கு ராஜபட்சவும், விக்ரமசிங்கவும் உரிமை கோரி வருகின்றனர்.
இந்நிலையில், நாடாளுமன்றம், துணைத் தலைவர் தலைமையில் கடந்த வாரம் கூடியது. அப்போது, நாடாளுமன்றத்தை வழிநடத்துவதற்கு சிறப்புக் குழு அமைப்பதற்கு முடிவெடுக்கப்பட்டது.
15 உறுப்பினர்களைக் கொண்ட அந்தக் குழுவில் தங்கள் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களே அதிகம் இடம்பெற வேண்டும் என்று ஒவ்வொரு கட்சியும் வாதிட்டு வருகின்றன.
இதுவரை, சிறீசேனாவின் ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சி 7 உறுப்பினர்களையும், தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி ஆகியவை தலா ஒரு உறுப்பினரையும் பரிந்துரை செய்துள்ளன.
இந்தச் சூழலில் இலங்கை நாடாளுமன்றம் வெள்ளிக்கிழமை மீண்டும் கூடுகிறது. அவையில் முதல் நிகழ்வாக, வழிநடத்தும் சிறப்புக் குழுவுக்கு பிரதிநிதிகள் நியமிக்கப்படவுள்ளனர்.
அமெரிக்க எம்.பி. கடிதம்: இதனிடையே, அமெரிக்க நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் கிறிஸ் வான் ஹோலன், அதிபர் சிறீசேனாவுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், இலங்கை பிரதமரை (ரணில் விக்ரமசிங்க) நீங்கள் பதவிநீக்கம் செய்ததும், அதன் தொடர்ச்சியாக, 2 நம்பிக்கையில்லா தீர்மானங்களை ஏற்க மறுத்ததும் மிகுந்த வருத்தம் அடையச் செய்துள்ளது; எனவே, இலங்கை அரசமைப்புச் சட்டத்துக்கு மதிப்பளித்து நம்பிக்கையில்லா தீர்மானத்தின் முடிவுகளை அதிபர் சிறீசேனா ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.