உகாண்டாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 34 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து மீட்பு குழு அதிகாரிகள் தெரிவித்ததாவது:
உகாண்டாவுக்கு கிழக்கே புடுடா மாவட்டத்தில் உள்ள புக்காலஸி நகரத்தில் வியாழக்கிழமை கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியை ஒட்டியிருந்த வீடுகள் மண்ணுக்குள் புதையுண்டன. இந்த கோர சம்பவத்தில் 34 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காணாமல் போயுள்ளனர்.
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு மீட்புக் குழு அதிகாரிகள் உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டனர். உள்ளூர் நிர்வாகத்தின் சார்பில் நிவாரண நடவடிக்கைகள் முழு வீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தில் சிக்கி காணாமல் போனவர்கள் குறித்த விவரங்களை அவர்களது உறவினர்கள் உதவியுடன் அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர். இந்தப் பணிகள் முடிவுற்ற பிறகுதான் எத்தனை பேர் நிலச்சரிவில் சிக்கி காணாமல் போயுள்ளனர் என்பது குறித்து தெளிவாக தெரிவிக்க முடியும்.
கடந்த சில நாள்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஆற்றில் வெள்ளப் பெருக்கை ஏற்படுத்தியுள்ளது. ஆற்றின் கரையோரப் பகுதிகளில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் பெரிய கற்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் பலத்த சேதத்தை உண்டாக்கியுள்ளன. கட்டட இடிபாடுகளை அகற்றும் பணிகளில் செஞ்சிலுவை சங்கத்தினர் ஈடுபட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.