துருக்கியிலுள்ள சவூதி அரேபிய துணைத் தூதரகத்தில், செய்தியாளர் ஜமால் கஷோகி கொல்லப்பட்டதற்கான விடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாக அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அதிகாரிகளை மேற்கோள்காட்டி ஊடகங்கள் தெரிவித்துள்ளதாவது:
துருக்கியின் இஸ்தான்புல் நகரிலுள்ள சவூதி அரேபிய தூதரத்துக்கு இந்த மாதம் 2-ஆம் தேதி சென்ற சவூதி நாட்டு செய்தியாளர் ஜமால் கஷோகி, அங்கு கொல்லப்பட்டதை நிரூபிக்கும் வகையிலான விடியோ மற்றும் ஆடியோ பதிவுகள் துருக்கி அதிகாரிகளிடம் உள்ளன.
அங்கு ரகசியமாக பதிவு செய்யப்பட்ட ஆடியோவில், சவூதியிலிருந்து வந்திருந்த ஆள்கள் கஷோகியிடம் விசாரணை நடத்தும் உரையாடல்களும், அவரை அடித்துத் துன்புறுத்தும் சப்தமும் இடம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
கஷோகியை அந்த இடத்திலேயே படுகொலை செய்த சவூதி ஆள்கள், அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி அங்கிருந்து அப்புறப்படுத்தியதாகவும் தெரிகிறது.
இந்த ஆதாரங்களை உடனடியாக வெளியிட்டால், சவூதி தூதரகத்தில் துருக்கி வேவு பார்த்து வந்த விவகாரம் வெளியே தெரிந்துவிடும் என்பதால் அவற்றை வெளியிடுவதற்கு துருக்கி தயக்கம் காட்டி வருகிறது என்று ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
துருக்கி அதிகாரிகளுடன் ஆலோசனை: இதற்கிடையே, செய்தியாளர் ஜமால் கஷோகி மாயமான விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக சவூதி அரேபியக் குழு துருக்கி வந்துள்ளது.
செய்தியாளர் மாயமான விவகாரத்தில் சவூதி அரேபியா மீது துருக்கி அதிகாரிகள் குற்றம் சுமத்தினாலும், அந்த நாட்டுத் தலைமை இதுகுறித்து வெளிப்படையான அறிக்கை எதையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும், அரசுக்குச் சொந்தமான ஊடகங்கள் சவூதி அரேபியாவிலிருந்து வந்தவர்கள்தான் துணைத் தூதரகத்தில் கஷோகியை படுகொலை செய்ததாக கூறி வருகின்றன.
இந்த விவகாரத்தால், துருக்கி - சவூதி அரேபியா இடையிலான உறவில் ஏற்கெனவே நிலவி வரும் பதற்றம் மேலும் தீவிரமடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, சவூதி மீது துருக்கி சுமத்தும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அது அமெரிக்காவிலும், மேலை நாடுகளிலும் சவூதி அரேபியாவுக்கு மிகப் பெரிய அவப் பெயரை ஏற்படுத்தித் தரும். மேலும், சீர்திருத்தவாதியாக அறியப்படும் சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் நவாஃப் அல்-சவூத், பிற நாடுகளுடன் இணைந்து மேற்கொண்டு வரும் முன்னேற்றத் திட்டங்களிலும் பின்னடைவு ஏற்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சவூதி அரேபிய நாட்டு செய்தியாளரான ஜமால் கஷோகி, சர்ச்சைகள் காரணமாக சொந்த நாட்டிலிருந்து வெளியேறி லண்டன் சென்றார்.
தற்போது அமெரிக்காவில் வசித்து வந்த அவர், அங்கு வெளியாகும் "வாஷிங்டன் போஸ்ட்' நாளிதழில் கட்டுரைகள் எழுதி வந்தார்.
சவூதி அரச குடும்பத்தோடு நெருக்கமாக இருந்தாலும், அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும், பட்டத்து இளவரசருக்கு எதிராகவும் அவர் கருத்துகளைத் தெரிவித்து வந்தார்.
இந்தச் சூழலில், துருக்கி நாட்டுப் பெண்ணை திருமணம் செய்ய விரும்பிய அவருக்கு, அந்த நாட்டுச் சட்டப்படி சில ஆவணங்கள் தேவைப்பட்டன. அதனைப் பெறுவதற்காக அவர் துருக்கியின் இஸ்தான்புல் நகரிலுள்ள சவூதி அரேபிய துணைத் தூதரகத்துக்கு இந்த மாதம் 2-ஆம் தேதி சென்றார்.
ஆனால், அதற்குப் பிறகு அவரைக் காணவில்லை.
தூதரகத்துக்குள் அவரை சவூதி அனுப்பிய ஆட்கள் கொன்று விட்டதாகவும், கருப்பு நிற காரில் அவரது உடலை வெளியே கொண்டு சென்றதாகவும் துருக்கி கூறி வருகிறது.
ஆனால், சவூதி அரேபியாவோ அந்தக் குற்றச்சாட்டை மிகக் கடுமையாக மறுத்து வருகிறது.