ஆப்கானிஸ்தானில் தேர்தல் பொதுக் கூட்டத்தில் சனிக்கிழமை நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது: தக்கர் மாகாணம் ருஸ்டக் மாவட்டத்தில் சனிக்கிழமை தேர்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது கூட்டத்துக்கு அருகே வெடிபொருள்களுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் திடீரென வெடித்து சிதறியது. யாரும் எதிர்பாராத வகையில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் பாதுகாப்பு படை வீரர்கள் உள்ளிட்ட 14 பேர் உயிரிழந்தனர். மேலும், 32 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
ஆப்கனில் அக்டோபர் 20-இல் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர் நயீபா யூஷுபி பெக்கை குறிவைத்து பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நிகழ்த்தியுள்ளனரா என்பது குறித்து உடனடியாகத் தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.