செய்தியாளர் மாயமான விவகாரம்: சவூதிக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை

செய்தியாளர் ஜமால் கஷோகி மர்மமான முறையில் மாயமானதற்கு சவூதி அரேபியா காரணமாக இருக்கலாம் என்று கூறியுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அது உறுதி செய்யப்பட்டால் அந்த நாட்டுக்கு
செய்தியாளர் மாயமான விவகாரம்: சவூதிக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை

செய்தியாளர் ஜமால் கஷோகி மர்மமான முறையில் மாயமானதற்கு சவூதி அரேபியா காரணமாக இருக்கலாம் என்று கூறியுள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அது உறுதி செய்யப்பட்டால் அந்த நாட்டுக்கு மிகக் கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.
 இதுகுறித்து அமெரிக்காவின் "சிபிஎஸ் நியூஸ்' தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது:
 துருக்கியிலுள்ள சவூதி அரேபிய துணைத் தூதரகத்துக்குச் சென்ற, செய்தியாளர் ஜமால் கஷோகி மர்மமான முறையில் மாயமாகியுள்ளார்.
 அவரை அந்த தூதரகத்துக்குள் சவூதி ஆள்கள் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்படுகிறது.
 எனினும், தற்போதுள்ள நிலையில் சவூதி அரேபியா அந்தக் குற்றச்சாட்டை மிகக் கடுமையாக மறுத்து வருகிறது.
 அவ்வாறு மறுப்பு தெரிவித்தாலும், கஷோகி மர்மமான முறையில் மாயமானதற்கு சவூதி அரேபியாவே காரணமாக இருக்க வாய்ப்புள்ளது.
 இதுதொடர்பாக நாங்கள் தீர விசாரிப்போம். சவூதி அரேபியா மீதான குற்றச்சாட்டு நிரூபணமானால், அந்த நாட்டுக்கு மிகக் கடுமையான தண்டன விதிக்கப்படும் என்றார் அவர்.
 சவூதி அரேபிய நாட்டு செய்தியாளரான ஜமால் கஷோகி, சர்ச்சைகள் காரணமாக சொந்த நாட்டிலிருந்து வெளியேறி லண்டன் சென்றார். தற்போது அமெரிக்காவில் வசித்து வந்த அவர், அங்கு வெளியாகும் "வாஷிங்டன் போஸ்ட்' நாளிதழில் கட்டுரைகள் எழுதி வந்தார்.
 சவூதி அரச குடும்பத்தோடு நெருக்கமாக இருந்தாலும், அரசின் கொள்கைகளுக்கு எதிராகவும், பட்டத்து இளவரசருக்கு எதிராகவும் அவர் கருத்துகளைத் தெரிவித்து வந்தார்.
 இந்தச் சூழலில், துருக்கி நாட்டுப் பெண்ணை திருமணம் செய்ய விரும்பிய அவருக்கு, அந்த நாட்டுச் சட்டப்படி சில ஆவணங்கள் தேவைப்பட்டன.
 அதனைப் பெறுவதற்காக அவர் துருக்கியின் இஸ்தான்புல் நகரிலுள்ள சவூதி அரேபிய துணைத் தூதரகத்துக்கு இந்த மாதம் 2-ஆம் தேதி சென்றார்.
 ஆனால், அதற்குப் பிறகு அவரைக் காணவில்லை.
 தூதரகத்துக்குள் அவரை சவூதி அனுப்பிய ஆட்கள் கொன்று விட்டதாகவும், கருப்பு நிற காரில் அவரது உடலை வெளியே கொண்டு சென்றதாகவும் துருக்கி கூறி வருகிறது.
 துணைத் தூதரகத்தில், செய்தியாளர் ஜமால் கஷோகி கொல்லப்பட்டதற்கான ஆடியோ ஆதாரங்கள் துருக்கி அதிகாரிகளிடம் இருப்பததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 அங்கு ரகசியமாக பதிவு செய்யப்பட்ட ஆடியோவில், சவூதியிலிருந்து வந்திருந்த ஆட்கள் கஷோகியிடம் விசாரணை நடத்தும் உரையாடல்களும், அவரை அடித்துத் துன்புறுத்தும் சப்தமும் இடம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
 கஷோகியை அந்த இடத்திலேயே படுகொலை செய்த சவூதி ஆள்கள், அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி அங்கிருந்து அப்புறப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
 இந்த ஆதாரங்களை உடனடியாக வெளியிட்டால், சவூதி தூதரகத்தில் துருக்கி வேவு பார்த்து வந்த விவகாரம் சர்ச்சையாகி விடும் என்பதால் அவற்றை வெளியிடுவதற்கு துருக்கி தயக்கம் காட்டி வருகிறது என்று ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 ஆனால், சவூதி அரேபியாவோ இந்தக் குற்றச்சாட்டுகளை மிகக் கடுமையாக மறுத்து வருகிறது.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com