டோக்யோ: நாள்தோறும் இரவு நேரத்தில் 6 மணிநேரம் தூங்கும் ஊழியர்களுக்கு ஜப்பான் நிறுவனம் ஒன்று பணப்பரிசு அளித்து பாராட்டும் ஆச்ரயத் தகவல் வெளியாகியுள்ளது
ஜப்பானில் சமீபத்தில் அதிகமான வேலைப்பளு, மற்றும் பணிநெருக்கடி காரணமாகப் பல ஊழியர்கள் திடீரென உடல்நலக்குறைவால் மரணமடைந்தனர். இதையடுத்து ஜப்பானில் தொழிலாளர் பராமரிப்பு சட்டத்தில் பல்வேறு கிடுக்கிப்பிடி மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன.
அதனை ஒட்டி ஜப்பான் தலைநகர் டோக்யோவில் உள்ள கிரேஸி இன்டர்நேஷனல் எனும் திருமண ஏற்பாட்டு நிறுவனமானது இந்தத் திட்டத்தை தங்களின் ஊழியர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
அதன்படி, ஊழியர்களின் செல்போனில் ஒரு தனிப்பட்ட செயலியானது பதிவேற்றம் செய்யப்படும். இந்த செயலியை ஊழியர்கள் 'ஆன்' செய்து வைத்துத் தூங்கும்போது, அந்த செயலியானது தூங்கும் ஊழியர்களைக் கண்காணிக்கும்.
அதன் கணக்கீட்டின்படி நாள் ஒன்றுக்கு இரவில் 6 மணிநேரம் தூங்கும் ஊழியர்களுக்கு ஊக்கப்புள்ளிகள் பரிசாக அளிக்கப்படும். இந்த ஊக்கப்புள்ளிகளைப் பயன்படுத்தி நிறுவனத்துக்கு சொந்தமான கேண்டீனில் ஆண்டுக்கு இந்திய மதிப்பில் ரூ.48 ஆயிரம் வரை சாப்பிட்டுக்கொள்ள முடியும். அல்லது பணமாக பெற்றுக்கொள்ள முடியும்.
இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
ஜப்பான் நாட்டு மக்கள் இரவில் தூங்கும் நேரம் குறைந்து, சமூக ஊடகங்களில் அதிகமாகக் கவனம் செலுத்தி வருகின்றனர். இதனால், மறுநாள் காலையில் அவர்களால் கவனமுடன் பணி செய்ய இயலவில்லை. இதன் காரணமாக நிறுவனங்களில் உற்பத்தியும், வேலையும் பாதிக்கிறது. இதைத் தடுக்கும் ஒரு முயற்சியாகவே இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.