அமெரிக்காவில் நடைபெறவுள்ள உலக ஹிந்து காங்கிரஸ் மாநாட்டில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு சிறப்புரையாற்றுகிறார்.
இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,
உலக ஹிந்து காங்கிரஸ் 2-ஆவது மாநாடு அமெரிக்காவில் செப்டம்பர் 7-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இங்கு உலகம் முழுவதும் உள்ள ஹிந்துக்கள் ஒன்றிணைந்து தேவையான தகவல்கள்களைப் பகிர்வது மற்றும் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்துகொள்வது போன்ற நிகழ்வுகள் நடைபெறும்.
இந்த மாநாட்டின் 2-ஆம் நாளான செப்டம்பர் 8-ஆம் தேதி இந்திய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு சிறப்புரையாற்றுகிறார். அப்போது, உலகம் முழுவதிலும் இருந்து கலந்துகொள்ளும் ஹிந்துக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.
4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த உலக ஹிந்து காங்கிரஸ் மாநாட்டின் போது ஹிந்து சமயம் சார்ந்த ஆன்மீகம், மரபு, கலாச்சாரம் ஆகியவற்றின் மகத்துவம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படும். மேலும் ஹிந்துக்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் தொடர்பான நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்படும். மேலும் ஹிந்துக்களின் பொருளாதாரம், அரசியல் நிலை, ஹிந்துப் பெண்கள் மற்றும் இளைஞர்களின் பங்களிப்பு, கல்வி, ஊடகம் மற்றும் சமய ஒருங்கிணைப்பு உள்ளிட்டவை தொடர்பாகவும் விவாதிக்கப்படும்.
சிகாகோவில் நடைபெற்ற உலக சமய மாநாட்டில் சுவாமி விவேகானந்தரின் உரையாற்றியதன் 125-ஆவது ஆண்டு விழா இந்த மாநாட்டின் போது கடைபிடிக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.