ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை குறிவைத்து நடத்திய தாக்குதல்களில் 60 வீரர்கள் உயிரிழந்தனர்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது:
வடக்கு ஆப்கானிஸ்தானின் நான்கு மாகாணங்களில் உள்ள பாதுகாப்பு படையினரை குறிவைத்து தலிபான் பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர். இருதரப்புக்கும் இடையே இரவு முழுதும் நீடித்த சண்டை திங்கள்கிழமை காலை வரை தொடர்ந்தது.
குறிப்பாக சாயத் மாவட்டத்தில் உள்ள சர்}இ}பவுல் நகரில் சோதனை சாவடியை குறிவைத்து தலிபான்கள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 17 பேர் உயிரிழந்தனர். பயங்கரவாதிகளின் தாக்குதலை முறியடிக்க ராணுவத்தின் தரப்பில் விமானப் படை உதவி கோரப்பட்டது. இதையடுத்து, விமானப் படைப்பிரிவினர் நடத்திய அதிரடி தாக்குதலில் 39 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். மேலும், 14 பேர் பலத்த காயமடைந்தனர்.
குண்டுஸ் பகுதியில் உள்ள பல்வேறு ராணுவ நிலைகள் மீதும் தலிபான் பயங்கரவாதிகள் இதேபோன்ற தாக்குதலை நிகழ்த்தினர். அதில் 19 வீரர்கள் உயிரிழந்ததுடன் 20 பேர் படுகாயமடைந்தனர்.
இவை தவிர, ஸமன்ஹன் மாகாணம் தர்}இ}ஸஃப் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய மற்றொரு தாக்குதலில் 14 அதிகாரிகள் கொல்லப்பட்டனர். ஜாஸ்ஜன் மாகாணத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த 10 வீரர்கள் உயிரிழந்தனர்என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
குண்டுஸ் மற்றும் ஜாஸ்ஜன் மாகாணங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு தலிபான்கள் பொறுப்பேற்பதாக அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லாஹ் முஜாகீத் அறிவித்தார்.