ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு பலியானோரின் எண்ணிக்கை 44-ஆக அதிகரித்தது.
இதுகுறித்து அமைச்சரவை தலைமை செயலர் யோஷிடே சுகா திங்கள்கிழமை கூறியதாவது: ஜப்பானின் ஹொக்கைடோ தீவை கடந்த வாரம் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்துக்கு பலியானவர்களின் எண்ணிக்கை திங்கள்கிழமை நிலவரப்படி 44-ஆக உயர்ந்துள்ளது. இதுவே, அந்த நிலநடுக்கத்துக்கு பலியான இறுதி எண்ணிக்கையாகும். இதையடுத்து, அரசிடம் உள்ள காணாமல் போனவர்களின் பட்டியலில் எந்தவொரு நபரின் பெயரும் விடுபடவில்லை. அனைவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதிகபட்சமாக அட்ஸுமா நகரத்தில்தான் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. ரிக்டர் அளவுகோலில் 6.6 அலகுகளாகப் பதிவான நிலநடுக்கத்தில் சிக்கி அந்த நகரத்தின் பெரும்பாலான பகுதிகள் சிதைந்து போனது.
மீட்புப் பணிகளில், 40,000 போலீஸார், தீயணைப்பு படை வீரர்கள் இரவு பகலாக ஈடுபடுத்தப்பட்டனர். இன்னும், 2,700-க்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட அனைவரும் சகஜ நிலைக்கு திரும்ப அரசு துரித கதியில் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இன்னும் சில பகுதிகளில் கனமழை பெய்தால் அதனால் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார் அவர்.
இதனிடையே, நிலநடுக்கம் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபே முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக செய்யும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.