பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் ஞாயிற்றுக்கிழமை இரவு மர்ம நபர் ஒருவர் நடத்திய கத்திக் குத்து தாக்குதலில் ஏழு பேர் காயமடைந்தனர். அதில், இருவர் பிரிட்டனைச் சேர்ந்தவர்கள்.
இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:
தலைநகர் பாரீஸின் வடகிழக்கு பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகம் மிகுந்த பேஸின் டிலா விலீட்டி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு உள்ளூர் நேரப்படி 11 மணிக்கு இந்த கத்தி குத்து தாக்குதல் சம்பவம் நடந்தது. சாலையில் சென்றவர்களை குறிவைத்து அந்த மர்மநபர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினார். இதில், பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி இருவர் உள்ளிட்ட ஏழு பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் நான்கு பேரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
தாக்குதல் நடத்திய நபரை பொதுமக்கள் அருகில் இருந்த இரும்பு குண்டுகளை வீசி பிடிக்க முற்பட்டுள்ளனர். சம்பவம் அறிந்து விரைந்து சென்ற போலீஸார் அந்த நபரை மடக்கிப் பிடித்தனர் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபரை போலீஸார் விசாரித்ததில் அவர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. ஆனால், தாக்குதல் சம்பவத்தை வைத்து பார்க்கையில் பயங்கரவாத செயலாக அறியப்படுதவதற்கான அறிகுறி எதுவும் தற்போதைக்கு இல்லை என்று முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் 2015-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இஸ்லாமிய தேச பயங்கரவாதிகள் (ஐ.எஸ்.) நடத்திய கொடூர தாக்குதலில் 240-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதையடுத்து, அவ்வப்போது ஐ.எஸ். பெயரில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது அங்கு தொடர் கதையாகி வருகிறது. அதனை எதிர்கொள்ளும் வகையில் பிரான்ஸ் போலீஸார் எப்போதும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.