ஜப்பான் நாட்டைச் சேர்ந்த யுசாகு மேசாவா என்ற கோடீஸ்வரர் நிலாவுக்குச் சுற்றுலா செல்லவிருக்கிறார். இந்த அறிவிப்பை அமெரிக்காவின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
பல ஆண்டுகளுக்கு முன்பே நிலாவில் பாட்டி வடை சுடுவதாகக் கதைச் சொன்னவர்கள் இந்தியர்கள். இன்று அமெரிக்காவின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனமோ நிலாவுக்குச் சுற்றுலா அழைத்துச் செல்லும் அளவுக்கு விஞ்ஞானம் வளர்ந்துவிட்டது.
அமெரிக்காவின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் மனிதர்களை நிலாவுக்குச் சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இதற்கு உலக நாடுகளைச் சேர்ந்த ஏராளமான கோடீஸ்வரர்கள் நான், நீ என போட்டிப் போட்டுக் கொண்டு கட்டணம் செலுத்த முன்வந்தனர்.
இந்த நிலையில், அத்தனை பேரையும் தாண்டி ஜப்பான் நாட்டின் பணக்காரரான யுசாகு மேசாவா நிலவுக்கு தனது முதல் பயணத்தை மேற்கொள்ளவிருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பின் மூலம் யுசாகு உலகப் பிரபலமாகிவிட்டார். இவர்கள் இன்றோ அல்லது நாளையோ நிலவுக்குப் பயணிக்கப் போவதில்லை. வரும் 2023ம் ஆண்டு இவர்களது நிலவுப் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக புதிய ராக்கெட் வடிவமைக்கப்பட்டு வருகிறது. யுசாகு தன்னுடன் 8 பேரை நிலவுக்கு அழைத்துச் செல்லவும் முடிவு செய்துள்ளார்.