ஷெரீஃபுக்கு எதிரான ஊழல் தடுப்பு அமைப்பின் மனு நிராகரிப்பு

பனாமா ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ்
ஷெரீஃபுக்கு எதிரான ஊழல் தடுப்பு அமைப்பின் மனு நிராகரிப்பு


பனாமா ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் மேல்முறையீட்டுக்கு எதிராக, அந்த நாட்டு ஊழல் தடுப்பு நீதிமன்றம் தாக்கல் செய்திருந்த மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
இதுகுறித்து அந்த நாட்டிலிருந்து வெளியாகும் எக்ஸ்பிரஸ் டிரிபியூன்' நாளிதழ் தெரிவித்துள்ளதாவது:
அவென்ஃபீல்டு வழக்கில் வழங்கப்பட்டுள்ள தண்டனையை எதிர்த்து, நவாஸ் ஷெரீஃப் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனு மீது லாகூர் உயர் நீதிமன்றம் விசாரணை நடத்தக் கூடாது என உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் ஊழல் தடுப்பு நீதிமன்றம் மனு தாக்கல் செய்திருந்தது.
அந்த மனுவை திங்கள்கிழமை பரிசீலித்த நீதிபதிகள், அதனை நிராகரித்தனர்.
மேலும், அந்த மனுவை தாக்கல் செய்ததற்காக ஊழல் தடுப்பு நீதிமன்றத்துக்கு ரூ.20,000 அபராதமும் விதித்தனர் என்று அந்த நாளிதழ் தெரிவித்தது. 
கடந்த 2015-ஆம் ஆண்டில் பனமா ஆவணங்கள் வெளியானதைத் தொடர்ந்து, அப்போதைய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மீது ஊழல் புகார் எழுந்தது.
அவரும், அவரது குடும்பத்தினரும் முறைகேடாக சேர்த்த பணத்தை ரகசியமாக வெளிநாடுகளில் முதலீடு செய்திருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
இந்தக் குற்றச்சாட்டுகளை விசாரித்த பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், நவாஸ் ஷெரீஃப் மீதான பனாமா ஆவணக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி, அவரை தகுதி நீக்கம் செய்தது. அதையடுத்து, அவர் பிரதமர் பதவியிலிருந்தும், ஆளும் கட்சித் தலைவர் பதவியிலிருந்தும் விலகினார்.
இந்த நிலையில், நவாஸ் ஷெரீஃப் மற்றும் அவரது குடும்பத்தினர் ரகசிய முதலீடுகள் செய்த பணம், முறைகேடாகப் பெறப்பட்டதா என்பதை விசாரிக்கும்படி பாகிஸ்தான் ஊழல் தடுப்பு நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதையடுத்து, அந்த நீதிமன்றத்தில் நவாஸ் ஷெரீஃப் மற்றும் அவரது உறவினர்கள் மீது தனித் தனியாக 3 வழக்குகள் நடைபெற்று வந்தன.
இவற்றில், பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள அவென்ஃபீல்டு அடுக்குமாடி குடியிருப்புகள் வாங்கியது தொடர்பான வழக்கில் நவாஸ் ஷெரீஃபுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும், அவரது மகள் மரியம் நவாஸுக்கு 7 ஆண்டுகளும், மருமகன் முகமது சஃப்தாருக்கு ஓராண்டும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அதையடுத்து, அந்த மூவரும் கைது செய்யப்பட்டு ராவல்பிண்டியிலுள்ள அடிலாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சூழலில், நவாஸ், மரியம், சஃப்தார் ஆகியோருக்கு விதிக்கப்பட்டுள்ள சிறைத் தண்டனையை எதிர்த்து லாகூர் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதனைப் பரிசீலித்த நீதிபதிகள், மனு மீதான விசாரணையைத் தொடங்க கடந்த 10-ஆம் தேதி முடிவு செய்தனர். 
அதையடுத்து, உயர் நீதிமன்றத்தின் முடிவை எதிர்த்து ஊழல் தடுப்பு நீதிமன்றம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
தற்போது அந்த மனுவை நீதிபதிகள் நிராகரித்துள்ளனர்.

அம்மாவிடம் ஆசி...
புற்று நோயால் மரணமடைந்த தனது மனைவி குல்ஸþம் நவாஸின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக 5 நாள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருந்த நவாஸ் ஷெரீஃப், திங்கள்கிழமை மீண்டும் சிறை திரும்பினார்.
ராவல்பிண்டியிலுள்ள அடியாலா சிறைக்குச் செல்வற்கு முன்னதாக, அவர் தனது தாயாரிடம் ஆசி பெற்றார் .
குல்ஸþமின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக விடுவிக்கப்பட்டிருந்த நவாஸின் மகள் மரியம் மற்றும் மருமகன் சஃப்தார் ஆகியோரும், 5 நாள் ஜாமீன் காலம் முடிவடைந்து திங்கள்கிழமை சிறை திரும்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com