அமெரிக்கா மற்றும் சீனா இடையே 20 வருடங்களுக்கு வர்த்தகப் போர் தொடரும் என இணைய வர்த்தக நிறுவனமான அலிபாபா நிறுவனர் ஜேக் மா தெரிவித்தார்.
பிரபல இணைய வர்த்தக நிறுவனமான அலிபாபாவின் முதலீட்டாளர்கள் தின கருத்தரங்கம் சீனாவின் ஹாங்சௌ நகரத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் அலிபாபா நிறுவனர் ஜேக் மா (54) பேசுகையில்,
இன்னும் சில காலத்தில் சீனா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் வர்த்தகம் முற்றிலும் பாதிக்கும் சூழ்நிலை ஏற்படவுள்ளது. இந்த பாதிப்பு வெகு காலத்துக்கு தாக்கத்தை ஏற்படுத்தும். இது ஒரு மிகப்பெரிய வர்த்தக குழப்பமாகும்.
இந்த வர்த்தகப் போரானாது 20 நாட்களிலோ, 20 மாதங்களிலோ முடிந்துவிடாது. அடுத்த 20 ஆண்டுகளுக்கு கூட தொடர வாய்ப்புள்ளது. சீனாவின் பொருளாதாரக் கொள்கைகளை அச்சுறுத்தும் விதமாக இந்த வர்த்தகப் போர் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சீனா மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு முறைகள் காரணமாக அதிபர் டிரம்பால் ஏற்படுத்தப்பட்ட சேதங்கள் குறித்தும் சீனத் தலைவர்கள் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும்.
சீனா தன்னுடைய பொருளாதார சீர்த்திருத்தம் மற்றும் வர்த்தகம் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்கவும், மேம்படுத்திக்கொள்ளவும் இதுவே சரியான தருணம் என்று குறிப்பிட்டார்.
முன்னதாக, அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் ரூ.14 லட்சம் கோடி மதிப்பிலான சீனப் பொருட்களின் மீது 10 சதவீதம் கூடுதல் வரி விதித்ததன் மூலம் சீனப் பொருட்களின் மீதான மொத்த வரி 200 பில்லியன் அமெரிக்க டாலர்களை உயர்த்தி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நடவடிக்கை எடுத்துள்ளார்.
இந்த புதிய வரி விதிப்பு முறை செப்டம்பர் 24-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படவுள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 25 சதவீதம் கூடுதலாகும். இதனால் உணவு, இணைய தொழில்நுட்பம், பேஸ்பால் விளையாட்டு கிளொஸ், தொழிற்சாலை சாதனங்கள் என அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படவுள்ள சீன பொருட்களின் வர்த்தகம் பாதிக்கப்படவுள்ளது.
இதையடுத்து சீனாவில் இறக்குமதி செய்யப்படும் அமெரிக்க பொருட்களின் மீது 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்கப்படவுள்ளது. இதனால் ஆண்டொன்றுக்கு அமெரிக்காவுக்கு கூடுதலாக 60 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரிச்சுமை ஏற்படும். இந்த கூடுதல் வரியானது உடனடியாக அமல்படுத்தப்படுவதாக சீனா செவ்வாய்கிழமை தெரிவித்தது.
இதனால் சீனாவில் இறக்குமதி செய்யப்படும் இறைச்சி, ரசாயனங்கள், மதுபானங்கள், ஜவுளி, தொழிற்சாலை உபகரணங்கள், மரச்சாமான்கள் மற்றும் ஆட்டோமொபைல் சாதனங்கள், இயந்திர உதிரி பாகங்கள் என ரூ.4 லட்சம் கோடி மதிப்பிலான சுமார் 5 ஆயிரம் பொருட்களின் மீதான வர்த்தகம் பாதிக்கப்படவுள்ளது.