கோலாலம்பூர்: ரூ. 1,849 கோடி அளவில் ஊழல் செய்த வழக்கில் மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் கைது செய்யப்பட்டுள்ளார்.
மலேசியாவில் கடந்த மே மாதம் நடந்த நடந்த நாடாளுமன்ற தேர்தலில், அங்கு 60 ஆண்டுகளாக ஆட்சி புரிந்து வந்த 'பேரிசன் நேஷனல் கூட்டணி' படுதோல்வி அடைந்தது. நஜிப் ரசாக் பிரதமர் பதவியை இழந்தார். 92 வயதான எதிர்கட்சித் தலைவர் மகாதீர் மீண்டும் முகமது பிரதமர் ஆனார்.
இந்த நிலையில் மலேசிய அபிவிருத்தி வாரியத்தின் நிதியை நஜிப் ரசாக் பிரதமராக இருந்த பொழுது முறைகேடாக பயன்படுத்தி சொத்துக்குவிப்பில் ஈடுபட்டார் என்று அவர் மீது புகார் எழுந்தது. இதுதொடர்பாக விசாரணை நடந்தது.
விசாரணையின் ஒரு பகுதியாக, அவருக்கு சொந்தமான கட்டிடங்களில் மலேசிய ஊழல் தடுப்பு படையினரால் நடத்தப்பட்ட அதிரடி சோதனைகளில், 273 மில்லியன் டாலர் (சுமார் ரூ.1,856 கோடி) மதிப்பிலான நகைகள் மற்றும் ரொக்கம் கைப்பற்றப்பட்டன. அதில் ஊழலில் தொடர்பு உடையதாக கருதப்படுகிற 272 மில்லியன் டாலர் (சுமார் ரூ.1,849 கோடி) டெபாசிட்டுகளுடன் கூடிய 408 வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டன.
இதுதொடர்பாக நஜிப் ரசாக்கிடமும், அவரது மனைவி ரோஸ்மா மன்சோரிடமும் ஊழல் தடுப்பு படையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் நஜிப் ரசாக் புதன் மதியம் கோலாலம்பூரில் உள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமையகத்தில் நடத்தப்பட்ட விசாரணையை தொடர்ந்து கைது செய்யப்பட்டார்.