நியூயார்க்: தனது மையக் கணிப்பொறியில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக, செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்து வந்த கியூரியாசிட்டி விண்கலம் தன்னுடைய பணிகளை நிறுத்திக் கொண்டுள்ளது.
பூமியில் இருந்து சுமார் 22 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வினோத கிரகம் செவ்வாய். இந்த கிரகத்தை பற்றிய ஆராய்ச்சியில் அமெரிக்கா, ரஷியா, இந்தியா மற்றும் சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன.
அதன் ஒரு முக்கிய கட்டமாக 2011 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கேப் கன்வரால் விமானப்படை நிலையத்தில் இருந்து, செவ்வாய் கிரகத்திற்கு கியூரியாசிட்டி விண்கலம் அனுப்பப்பட்டது. சுமார் 560 மில்லியன் கி.மீ பயணம் மேற்கொண்டு ஆகஸ்ட் 6, 2012 அன்று கியூரியாசிட்டிவெற்றிகரமாக செவ்வாயில் இறங்கியது.
கடந்த 5 வருடங்களாக, செவ்வாய் கிரகத்தில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட கியூரியாசிட்டி ரோவர் விண்கலமானது, செவ்வாய் கிரகம் தொடர்பான பல அறிவியல் உண்மைகளைக் கண்டறிந்து பல புகைப்படங்களை பூமிக்கு அனுப்பி உள்ளது.
இந்நிலையில் தனது மையக் கணிப்பொறியில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக, செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்து வந்த கியூரியாசிட்டி விண்கலம் தன்னுடைய பணிகளை நிறுத்திக் கொண்டுள்ளது. அதனால் செவ்வாயில் கண்டறிந்த தகவல்களை பூமிக்கு அனுப்புவதை தற்போது அது முழுமையாக நிறுத்தி உள்ளது.
விண்வெளி விஞ்ஞானிகள் மையக் கணினியில் என்ன சிக்கல் என்பதை விரைவில் கண்டறிந்து சரிசெய்யலாம் என தெரிவித்துள்ளனர். இதற்காகத் தனி அமைப்பு ஒன்றை உருவாக்கும் ஆலோசனையில் அவர்கள் உள்ளனர். இதனிடையே தாற்காலிகமாக விண்கலத்தின் சூரிய சக்தியை 3 மாதம் நிறுத்தி வைப்பதென்று நாசா முடிவு செய்துள்ளது.