லாகூர்: 2008 மும்பை தாக்குதல் குற்றவாளிகள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் தெரிவித்த கருத்துக்காக லாகூர் நீதிமன்றம் அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
'பனாமா ஆவணங்கள்' விவகாரத்தில் சிக்கி அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தால் பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரிஃப் இந்த ஆண்டு துவக்கத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். பின்னர் மே மாதம் பாகிஸ்தானின் 'டான்' நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
தீவிரவாத இயக்கங்கள் பாகிஸ்தான் மண்ணில் இருந்து செயல்படுகின்றன. 2008 மும்பை தாக்குதல் குற்றவாளிகள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள். இப்படி இவர்கள் அந்நிய மண்ணில் சென்று குற்றச் செயல்களில் ஈடுபடுவது எப்படி சரியாகும்? அத்துடன் இந்த மும்பை தாக்குதல் விசாரணையை தாமதம் செய்து வருவது ஏற்புடையதாக இல்லை.
இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.
அவரது இந்த கருத்துக்கு பாகிஸ்தானில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இதன் மூலம் அவர் நாட்டுக்கு துரோகமிழைத்து விட்டதாக குற்றசாட்டு எழுந்தது.
குறிப்பாக அமினா மாலிக் என்பவர் நவாஸ் ஷெரிஃபிப்புக்கு எதிராக லாகூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
அந்த வழக்கில் வரும் அக்டோபர் 8-ஆம் தேதி நேரில் ஆஜராகுமாறு நவாஸ் ஷெரிபுக்கு லாகூர் நீதிமன்றம் அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.