நெல் தரிசில் பயறுவகை சாகுபடி!

பயறு வகைகள் உடல் வளர்ச்சிக்கும், அறிவாற்றலுக்கும் தேவையான புரதத்தைக் கொண்டுள்ளன. தானியங்களில் உள்ளதைப்போல இரு மடங்கு
நெல் தரிசில் பயறுவகை சாகுபடி!


பெரம்பலூர்: பயறு வகைகள் உடல் வளர்ச்சிக்கும், அறிவாற்றலுக்கும் தேவையான புரதத்தைக் கொண்டுள்ளன. தானியங்களில் உள்ளதைப்போல இரு மடங்கு புரதம் கொண்டவை.
ஒரு மனிதனுக்கு, அன்றாடம் 80 கிராம் புரதம் தேவையென உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. ஆனால், 40 கிராமுக்கும் குறைவாகவே உடலுக்குக் கிடைக்கிறது. பாசனப் பகுதிகளில் சம்பா மற்றும் தாளடி நெல் அறுவடைக்கு முன் மெழுகு பதத்தில் பயறு வகைகள் விதைக்கப்படுகின்றன. இதற்கு நெல் தரிசுப் பயிர்கள் அல்லது தொடர் பயிர்கள் எனப் பெயர். நெல் தரிசு ஈரம் மற்றும் சத்துகளைப் பயன்படுத்தி பயிரிடுவதால், அதிக செலவின்றி கூடுதல் வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது. 
தற்போது தமிழ்நாட்டில் சுமார் 5.94 லட்சம் ஹெக்டேரில் பயறு வகைகள் சாகுபடி செய்யப்பட்டு, 3.10 லட்சம் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்தின் பயறு வகைத் தேவை 7 லட்சம் டன் எனவும், 3.90 லட்சம் டன் பற்றாக்குறை எனவும் கணக்கிடப்பட்டுள்ளது. 
தமிழ்நாட்டில் 1.46 லட்சம் ஹெக்டேரில் உளுந்து, பாசிப்பயறு பயிரிடப்பட்டு 32,000 டன் உற்பத்தி செய்யப்படுகிறது. பயறு வகை உற்பத்தி இந்தியாவில் ஹெக்டேருக்கு 623 கிலோவாகவும், தமிழகத்தில் 516 கிலோவாகவும் உள்ளது.
இதுகுறித்து பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள வேளாண் அறிவியல் மைய உழவியல் தொழில்நுட்ப வல்லுநர் மு. புனிதவதி கூறியது:
சாகுபடி நுட்பங்கள்
மண் வகை: பயறுவகை சாகுபடிக்கு களிமண் கலந்த குறுமண் நிலம் மிகவும் உகந்தது. களர் மற்றும் உவர் நிலத்தில் பச்சைப் பயிறு நன்கு விளையும். ஏடிடீ 3, 5, டி.எம்.வி 1 கோ- 4 ஆகிய உளுந்து வகைகளும், ஏடிடீ 3, கே.எம் 2 ஆகிய பாசிப் பயறு வகைகளும் நல்ல மகசூல் தரும். சான்று பெற்ற விதைகளை விதைக்க வேண்டும். 
பட்டம்: தைப்பட்டம் மிகவும் ஏற்றது. எனவே, ஜன. 15- இல் தொடங்கி பிப். 15-க்குள் விதைத்து விட வேண்டும். ஏனெனில், அந்த நாள்களில் வயலில் காணப்படும் ஈரப் பதமும், பனி ஈரமும் பயிர்களின் வளர்ச்சிக்கு உதவும்.
விதையளவு: ஏக்கருக்கு 10 கிலோ விதை போதும். இயந்திரம் மூலம் அறுவடை நடைபெறும் இடங்களில், 12 கிலோ விதைகளை விதைக்க வேண்டும். சங்கிலி வடிவ இயந்திரம் மூலம் அறுவடை நடைபெறும் வயல்களில் பயிர்கள் நன்கு வளரும். 
விதை நேர்த்தி: ஆறிய அரிசிக் கஞ்சியில் விதைகளுடன், ஒரு பொட்டலம் ரைசோபியம், ஒரு பொட்டலம் பாஸ்போபாக்டீரியா, 100 கிராம் சூடோமோனாஸ் ஆகியவற்றை கலந்து நேர்த்தி செய்து 15 நிமிடம் நிழலில் உலர்த்தி, 24 மணி நேரத்துக்குள் விதைத்து விட வேண்டும்.
விதைப்பு: சம்பா, தாளடி அறுவடை ஆள்கள் மூலம் நடைபெறும் இடங்களில், அறுவடைக்கு 7- 10 நாள்களுக்கு முன்பும், இயந்திரம் மூலம் அறுவடை நடைபெறும் இடங்களில் 4- 6 நாள்களுக்கு முன்பும், மெழுகு பதத்தில் விதைக்கவேண்டும். இந்தப் பதம் இல்லையெனில், பாசனம் செய்து பதம் வந்ததும் விதைக்க வேண்டும். 
பயிர் எண்ணிக்கை: ஒரு சதுர மீட்டரில் 33 செடிகள் இருக்க வேண்டும். விதைகள் முளைக்காத இடங்களில் முளைகட்டிய விதைகளை மீண்டும் விதைத்துப் பயிர் எண்ணிக்கையைப் பராமரிக்க வேண்டும். விதைத்த 20-ஆம் நாள் ஏக்கருக்கு 400 மி.லி குயினால்பாஸ் ஈதைல் களைக்கொல்லியை 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். 
இலைவழி ஊட்டம் அளித்தல்: அடியுரம் இடமுடியாத இடங்களில் 2 சத டி.ஏ.பி. கரைசல், பிளானோபிக்ஸ் வளர்ச்சி ஊக்கி அல்லது தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தின் பயறு ஒண்டரைத் தெளிக்க வேண்டும். பூக்கும் காலமான 25- வது நாள், காய்கள் பிடிக்கும் காலமான 45 நாள்களில் 2 சத டிஏபி கரைசல், ஒரு சத பொட்டாசியம் குளோரைடு, 40 பிபிஎம் 
பிளானோபிக்ஸ் கலந்த கரைசலை காலை அல்லது மாலையில், இலைகளில் நன்கு நனையும்படி தெளிக்க வேண்டும். 
2 விதக் கரைசல் தயாரிப்பு: ஒரு ஏக்கருக்கு தயாரிக்க 4 கிலோ டிஏபி தேவை. இதை 10 லிட்டர் நீரில் முதல் நாள் இரவில் ஊற வைத்து, மறுநாள் காலையில் தெளிந்த கரைசலை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். இத்துடன் 2 கிலோ பொட்டாசியம் குளோரைடு மற்றும் 160 மில்லி பிளானோபிக்ஸ் வளர்ச்சி ஊக்கி ஆகியவற்றை 200 லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவேண்டும். 
பயறு ஒண்டர்: ஏக்கருக்கு 2 கிலோ தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பயறு ஒண்டர் தேவை. இதை ஒட்டும் திரவத்துடன் 200 லிட்டர் நீரில் கலந்து பூக்கும் தருணத்தில் தெளித்தால் செடிகள் வறட்சியைத் தாங்கி அதிகளவில் காய்த்து 20- 25 சதம் வரை கூடுதல் மகசூல் கொடுக்கும். 
ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு சாற்றை உறிஞ்சும் பூச்சிகளான அசுவினி, வெள்ளை ஈ, தத்துப்பூச்சி, இலைச் சிலந்தி ஆகியவற்றின் தாக்குதலைக் கட்டுப்படுத்த 3 சத வேப்பெண்ணெய் கரைசல் அல்லது 5 சத வேப்பம் பருப்புக் கரைசலைத் தெளிக்கலாம். அல்லது ஏக்கருக்கு டைமெத்தயேட் 30 ஈசி 200 மில்லியை 200 லிட்டர் நீரில் கலந்து மாலையில் தெளிக்கலாம். காய்களைத் துளைத்துப் பருப்பைத் தின்னும் பச்சைக் காய்ப்புழு, பூ மற்றும் மொக்குகளைத் துளைத்துத் தின்னும் காய்ப்புழு, இலைகளைத் தாக்கிப் பெருஞ்சேதத்தை உண்டாக்கும் புகையிலை வெட்டுப்புழு ஆகியவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும். 
இதற்கு ஏக்கருக்கு 5 இனக்கவர்ச்சிப் பொறிகளை வைத்து ஆண் அந்துப் பூச்சிகளையும், ஒரு விளக்கு பொறியை வைத்து, தாய் அந்துப்பூச்சிகளையும் கவர்ந்து அழிக்க வேண்டும். இவற்றின் தாக்குதல் பொருளாதாரச் சேத நிலையைத் தாண்டினால் தயோடிகார்ப் 75 டபிள்யூ மருந்து 250 மில்லி அல்லது குளோர்பைரிபாஸ் 20 ஈசி மருந்து 500 மில்லி அல்லது டைகுளோர்வாஸ் 76 ஈசி மருந்து 400 மில்லியை 200 லிட்டர் நீரில் கலந்து மாலையில் தெளிக்க வேண்டும். 
மஞ்சள் தேமல் நோயைக் கட்டுப்படுத்த நோய் தாக்கிய செடிகளைப் பிடுங்கி அழிக்க வேண்டும். மேலும், இதைப் பரப்பும் வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்த டைமெத்தயேட் 30 ஈசி மருந்து 200 மில்லி மருந்தை 200 லிட்டர் நீரில் கலந்து மாலையில் தெளிக்க வேண்டும்.
அறுவடை: 80 சதத்துக்கு அதிகமான காய்கள் முற்றியதும் தரைமட்டத்துக்குச் சற்று மேலே செடிகளை அறுவடை செய்ய வேண்டும். இதனால் மண்ணுக்குள் இருக்கும் வேர் மண் வளத்தைப் பெருக்க உதவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com