எள் பயிரிட்டால் கூடுதல் லாபம்!

தமிழ்நாட்டில் தற்போது பல மாவட்டங்களில் அதிக மழை பெய்துள்ள போதிலும் மாநிலத்தின் வடக்கு மாவட்டங்களில் போதிய அளவு மழை பெய்யவில்லை. 
எள் பயிரிட்டால் கூடுதல் லாபம்!

அரக்கோணம்: தமிழ்நாட்டில் தற்போது பல மாவட்டங்களில் அதிக மழை பெய்துள்ள போதிலும் மாநிலத்தின் வடக்கு மாவட்டங்களில் போதிய அளவு மழை பெய்யவில்லை. 
ஏரிகளில் இன்னும் பாதியளவு கூட நீர் இருப்பு இல்லாத நிலையே காணப்படுகிறது. இந்தக் காலகட்டத்தில் விவசாயிகள் தங்கள் வயல்களில் எண்ணெய் வித்துப் பயிரான எள்ளைப் பயிரிட்டால் அது நிலைத்து நின்று, குறைந்த நீரிலும் அதிக மகசூலைக் கொடுத்து வருமானம் தரும் என வேளாண்மைத் துறையினர் ஆலோசனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து வேலூர் மாவட்டம், அரக்கோணம் வட்டார வேளாண் உதவி அலுவலர் சி.முரளி கூறுகையில் எள் பயிரிடுவது விவசாயிகளுக்கு செலவில்லாமல் லாபம் தரும் என்றார். எள் பயிரிடும் முறைகள் குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: 
எள் விதைக்க கார்த்திகை மாதம் ஏற்றது. டிசம்பர்-ஜனவரி மாதங்களில் கோ-1, டிஎம்வி 3, 5, 7, எஸ்விபிஆர் 1, விஆர்ஐ (எஸ்வி) 2 ஆகியவை நல்ல ரகங்களாகும். இந்த ரகங்களின் வயது 85 முதல் 90 நாள்கள். இதில் கோ-1 மையத் தண்டு நீண்ட கிளைகளையும் குறைந்த கணுவிடைப் பகுதிகளையும் கொண்டது. இதன் விதைகள் கருப்பு நிறமாக இருக்கும். டிஎம்வி 3 மற்றும் டிஎம்பி 4 இரண்டுமே நன்கு கிளைத்த புதர்செடி போன்ற தோற்றத்தை உடையது. டிஎம்வி 5 நேரான நடுத்தரமான கிளைகளைக் கொண்டது. இதன் விதைகள் பழுப்பு நிறமாக இருக்கும். 
நிலம் தயாரித்தல்: மணற்பாங்கான வண்டல் செம்மண் மற்றும் கருவண்டல் நிலங்கள் ஏற்றவை. நிலத்தை இருமுறை டிராக்டர் கலப்பையால் (அல்லது) மூன்று முறை இரும்புக் கலப்பையால் (அல்லது) ஐந்து முறை நாட்டுக் கலப்பையால் உழ வேண்டும். சிறு விதைகளும் முளைக்குமாறு மண்ணில் உள்ள கட்டிகளை உடைத்து நுண்மைப்படுத்த வேண்டும். மண்ணில் உள்ள கடினமான கட்டிகளை உடைக்க உளிக்கலப்பை கொண்டு 0.5 ஆழத்தில் இருந்து செங்குத்தான திசைகளில் உழ வேண்டும். பிறகு 12.5 டன் தொழு உரம் (அல்லது) மக்கிய தென்னை நார்க்
கழிவு போட வேண்டும். இறவை எள் சாகுபடிக்கு கிடைக்கும் நீர் மற்றும் நிலத்தின் சரிவைப் பொறுத்து 10 சதுரமீட்டர் அல்லது 20 சதுர மீட்டர் அளவுக்கு படுக்கை தயாரிக்க வேண்டும். ஹெக்டேருக்கு 5 கிலோ விதை தேவைப்படும். 
விதை நேர்த்தி: ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைகோடெர்மா கொண்டு விதைநேர்த்தி செய்ய வேண்டும். விதைப்புக்கு முன் விதைநேர்த்தி செய்ய வேண்டும். நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை பூசணக் கொல்லியுடன் விதை நேர்த்தி செய்யக்கூடாது. ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் திரம் (அல்லது) 2 கிராம் கார்பன்டாசிம் கொண்டு விதை நேர்த்தி செய்தல் வேண்டும். 
விதைக்கும் முறை: விதைகளை வரிசையில் விதைக்க வேண்டும். விதையின் அளவில் நான்கு மடங்கு மணலுடன் விதையைக் கலந்து நிலத்தின் மேற்பரப்பில் சீராகத் தூவ வேண்டும். 3 செ.மீ ஆழத்தில் விதைகளை விதைத்து மண் கொண்டு மூட வேண்டும். 
இடைவெளி: வரிசைக்கு வரிசை 30 செ.மீ. இடைவெளியும் செடிக்கு செடி 30 செ.மீ இடைவெளியும் கொடுக்க வேண்டும். நெல் தரிசில் விதைகளை வீசி விதைக்க வேண்டும். பின்னர் ஒரு சதுர மீட்டருக்கு 11 செடிகள் வீதம் பயிர் கலைத்தல் அவசியம்.
உரம்: ஹெக்டேருக்கு 12.5 டன் மக்கிய தொழு உரத்தை கடைசி உழவுக்கு முன் இடவும். ரசாயன உரம் என்றால் மண் பரிசோதனைப்படி உரமிடுதல் சிறந்தது. அவ்வாறு செய்யாவிட்டால் பொதுவான பரிந்துரையைப் பின்பற்ற வேண்டும்.
மானாவாரியாக இருந்தால் ஹெக்டேருக்கு 23:13:13 கிலோ தழை, மணி, சாம்பல் சத்து (அ) 17:13:13 கிலோ தழை, மணி, சாம்பல் சத்துடன் 3 பாக்கெட் அசோஸ்பைரில்லம் (ஹெக்டேருக்கு 600 கிராம்) மற்றும் 3 பாக்கெட் (ஹெக்டேருக்கு 600 கிராம்) பாஸ்போபாக்டீரியா(அ) 6 பாக்கெட் அசோபாஸை (ஹெக்டேருக்கு 1200 கிராம்) இட வேண்டும். 
இறவையில் ஹெக்டேருக்கு 35:23:23 கிலோ தழை, மணி, சாம்பல் சத்து (அ) 21:23:23 கிலோ தழை மணி சாம்பல் சத்துடன் 3 பாக்கெட் அசோஸ் பைரில்லம் (ஹெக்டேருக்கு 600 கிராம்) மற்றும் 3 பாக்கெட் (ஹெக்டேருக்கு 600 கிராம்) பாஸ்போபாக்டீரியா (அ) 6 பாக்கெட் அசோபாஸை (ஹெக்டேருக்கு 1200 கிராம்) இட வேண்டும். 
தழை, மணி, சாம்பல் சத்து முழுவதையும் அடியுரமாக அளிக்க வேண்டும். ஹெக்டேருக்கு 5 கிலோ மாங்கனீஸ் சல்பேட்டை சேர்த்துக் கொள்ள வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட 100 சதவீத தழை, மணி, சாம்பல் சத்தை அளித்த நிலக்கடலைப் பயிரை தொடர்ந்து இறவை எள் பயிரிடும்போது, பரிந்துரைக்கப்பட்ட உரங்களில் தழைச்சத்து முழுவதையும் 50 சதவீத மணிசத்து மற்றும் சாம்பல் சத்தையும் இட வேண்டும். 
30 செ.மீ இடைவெளியில் 5 செ.மீ ஆழத்தில் வாய்க்கால் தோண்டி உரக்கலவையினை அதில் இட்டு, 3 செ.மீ ஆழத்திற்கு மண் கொண்டு மூட வேண்டும். இவ்வாறு வாய்க்காலில் இடவில்லையெனில் உரங்களை சீராக படுக்கையின் மீது தூவ வேண்டும். விதைத்த 15 நாள்கள் கழித்து கைக்களையும், 35 நாள்கள் கழித்து இரண்டாவது கைக்களையும் எடுத்து களைகளைக் கட்டுப்படுத்த வேண்டும். 
எள்ளிற்கு மண்ணின் தன்மை, பருவகாலம் ஆகியவற்றைப் பொறுத்து சுமார் 5 அல்லது 6 முறை நீர்பாய்ச்ச வேண்டும். முதல் முறை விதை விதைத்தவுடன் 7-ஆவது நாள் உயிர்த் தண்ணீர், 25-ஆவது நாள் பூக்கும் தருவாயில் 2 முறை, காய் பிடிக்கும் தருவாயிலும் முதிர்ச்சியடையும் போதும் 2 முறையாக 6 தடவை நீர்பாய்ச்ச வேண்டும். பூப்பூக்கும் பருவம், காய் பிடித்து முற்றும் பருவத்தில் நீர் பாய்ச்சுவதை கவனமாக கடைப்பிடிக்க வேண்டும். இறவைப் பயிரில் விதைத்த 65 நாள்களுக்குப் பின் நீர்பாய்ச்சக் கூடாது.
அறுவடைக்கான அறிகுறிகள்:
செடியில் கீழிருந்து 25 சதவீத இலைகள் உதிர்ந்து விடும். காய்கள் மற்றும் தண்டுபாகங்கள் பழுப்பு நிறமாக மாறும். செடியின் அடியிலிருந்து மேலாக உள்ள 10-ஆவது காயில் உள்ள விதைகள் கருப்பாக (முதிர்வு) மாறியிருக்கும். மேற்கண்ட அறிகுறிகள் தென்படும்போது அறுவடை செய்துவிட வேண்டும். தவறினால் காய்கள் வெடித்துச் சிதறி மகசூல் குறையும்.
எள்ளைப் பொருத்தவரை தற்போதைய காலகட்டத்தில் வியாபாரிகளே கிராமங்களுக்கு வந்து கொள்முதல் செய்கின்றனர். மேலும் அருகில் உள்ள பெரிய நகரங்களுக்கு நாம் சென்று விற்கும்போது கூடுதல் விலை கிடைக்கலாம். எனவே தற்போதைய சூழ்நிலையில் விவசாயிகள் எள்ளைப் பயிரிட்டு பயன்பெறலாம். 
மேலும் இப்பயிர் குறித்த விவரங்கள் தேவைப்படுவோர் தங்களது பகுதியில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களையோ அல்லது வேளாண் அலுவலர்களையோ அணுகலாம் என்றார் சி.முரளி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com