நெற்பயிரில் அதிக மகசூல் பெற...

நெற்பயிரில் அதிக மகசூல் பெற துத்தநாக நுண்ணூட்டச் சத்து இட வேண்டும் என்று பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
நெற்பயிரில் அதிக மகசூல் பெற...

அரியலூர்: நெற்பயிரில் அதிக மகசூல் பெற துத்தநாக நுண்ணூட்டச் சத்து இட வேண்டும் என்று பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சோழமாதேவி கிரீடு வேளாண் அறிவியல் நிலையப் பேராசிரியர்கள் ராஜா ரமேஷ், ராம சுப்பிரமணியன் ஆகியோர் வெளியிட்ட செய்தி குறிப்பு: நெற்பயிரில் அதிக விளைச்சல் பெற ரசாயன உரங்கள் மட்டுமே பெரும்பாலான விவசாயிகளால் அளிக்கப்படுகிறது. மேலும் ரசாயன உரங்களில் பேரூட்டச் சத்துகளான தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்துகள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. 
ஆனால் நுண்ணூட்டச் சத்துகளை அதிலும் குறிப்பாக துத்தநாக சத்தை (சிங் சல்பேட்) பெரும்பாலான விவசாயிகள் அளிப்பதில்லை.நெற்பயிர் விளைச்சலில் துத்தநாகச் சத்தின் பங்கு மிகவும் இன்றியமையாததாகும். நெற்பயிரில் பச்சையம் உருவாவது தொடங்கி பல்வேறு உயிர்வேதி வினைகளில் துத்தநாகம் உதவிபுரிகிறது. துத்தநாகம் அளிக்க இயலாத சூழ்நிலையானது விளைச்சலில் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தும்.
துத்தநாக சத்தின் குறைபாடு காணப்படுவதற்கான காரணிகள்: அதிக கார அமில மண்ணில் (பிஎச் 7-க்கு மேல்), தொடர்ந்து வயலில் நீர் தேக்கி வைப்பது, பாசன நீரில் அதிக அளவு பைகார்பனேட் உப்பின் அளவு இருத்தல், அதிகளவு மணிச்சத்து உரங்களை வயலில் இடுதல், தழைச்சத்து உரமாக தொடர்ந்து யூரியா பயன்படுத்தப்படுவது, தொடர்ந்து நெற்பயிரையே சாகுபடி செய்வதால் மண்ணிலுள்ள துத்தநாகச் சத்தை பயிர்கள் எடுத்துக் கொள்வதால் உண்டாகும் பற்றாக்குறை, மேலும் களர் நிலங்கள், மணிச்சத்து அதிகமாக உள்ள நிலங்கள், சுண்ணாம்புச்சத்து அதிகமாக உள்ள மண் ஆகிய நிலங்களில் துத்தநாகச் சத்தானது பயிர்களுக்கு கிடைப்பதில்லை.
பயிர்களில் துத்தநாகச் சத்தின் செயல்பாடுகள்: துத்தநாகம் பயிர்களின் செல்களிலுள்ள பல்வேறு நொதிகளிலும், உயிரணுக்களில் உள்ள ரைபோ நியூக்கிளிக் அமிலத் தயாரிப்பிலும் பங்கு பெறுகிறது. செல்களில் உள்ள சைட்டோபிளாசத்தின் ரைபோசு என்ற சர்க்கரைப் பொரு ளின் அளவை கட்டுப்படுத்தத் தேவைப்படுகிறது. பயிர்களில் நடைபெறும் பல்வேறு வளர்சிதை மாற்றங்களுக்கும் துத்தநாகம் தேவைப்படுகிறது.
துத்தநாகச் சத்துப் பற்றாக்குறையால் உண்டாகும் அறிகுறிகள்: நெற்பயிரில் துத்தநாகக் குறைபாடானது நடவு வயலில் நான்கு வாரத்திற்குள் காணப்படும். இளம் இலைகளின் நடுநரம்பு அடிப்புறத்திலிருந்து வெளுத்துக் காணப்படும். மேல்புறம் மற்றும் நடுப்பகுதி இலைகளில் பழுப்பு நிறப்புள்ளிகள் தோன்றும். இப்புள்ளிகள் ஒன்று சேர்ந்து இலை முழுதும் பழுப்படைந்து காய்ந்து விடும். பயிர்கள் சீராக வளராமல் திட்டு திட்டாக வளர்ச்சி குன்றிக் காணப்படும். 
துத்தநாகப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வழிமுறைகள்: வயலில் தொடர்ந்து தண்ணீர் தேங்கியிருப்பது நெற்பயிரில் துத்தநாகப் பற்றாக்குறை ஏற்படுவதற்கான ஒரு முக்கியக் காரணமாகும். 
எனவே, காய்ச்சலும், பாய்ச்சலுமாக தண்ணீர் பாய்ச்ச வேண்டும். வயலில் எப்போதும் தண்ணீர் தேங்காவண்ணமும் போதுமான ஈரப்பதம் மட்டும் இருக்குமாறும் பார்த்துக் கொள்ள வேண்டும்.மேலும்  ஏக்கருக்கு அடியுரமாக 10 கிலோ துத்தநாக சல்பேட் நுண்ணூட்ட உரம் இடுதல் வேண்டும். பசுந்தாள் உரங்கள் மற்றும் அங்கக உரங்களை அதிகளவில் வயலுக்கு இட வேண்டும். நெற்பயிரையே தொடர்ந்து சாகுபடி செய்யாமல் பயறுவகைப் பயிர்கள், எண்ணெய்வித்துப் பயிர்கள் போன்ற மாற்றுப் பயிர்களையும் சாகுபடி செய்ய வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com