மானாவாரி பயிர்களுக்கு நுண்ணுயிர் உர விதை நேர்த்தி

மானாவாரி பயிர்களுக்கு நுண்ணுயிர் உர விதை நேர்த்தி குறித்து தருமபுரி மாவட்டம்,  பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையப் பேராசிரியர்கள் ம.சங்கீதா,  பா.ச.சண்முகம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.  
மானாவாரி பயிர்களுக்கு நுண்ணுயிர் உர விதை நேர்த்தி


தருமபுரி:  மானாவாரி பயிர்களுக்கு நுண்ணுயிர் உர விதை நேர்த்தி குறித்து தருமபுரி மாவட்டம்,  பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையப் பேராசிரியர்கள் ம.சங்கீதா,  பா.ச.சண்முகம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.   
    நுண்ணுயிர் உரங்கள் என்பவை இயற்கையாகவே பயிரின் வேர்ப்பகுதியைச் சுற்றி வேர்சூழ் மண்டலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நுண்ணுயிர்கள் ஆகும்.  இவை, பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சாணங்கள் வகையைச் சார்ந்தவை. இவற்றை நாம் வெறும் கண்களால் காண இயலாது.  இவை காற்று மற்றும் மண்ணிலுள்ள பயிர்களுக்கு கிடைக்காத நிலையிலிருக்கும் தழை,  மணி மற்றும் சாம்பல் சத்துகளை பயிர்கள் எடுத்துக் கொள்ளும் வடிவத்தில் மாற்றிக் கொடுக்கின்றன. இந்த நுண்ணுயிர்கள் பயிரின் வேர்சூழ் மண்டலத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு,  ஆய்வகத்தில் வளர் ஊடகத்தில் வளர்க்கப்பட்டு,  அங்ககப் பொருள் நிறைந்த கரித்துகள் மற்றும் மண்ணுடன் கலந்து வணிக ரீதியாக உற்பத்தி செய்யப்பட்டு, பயிர் சாகுபடியில் பயன்படுத்தப்படுகிறது.
பொதுவாக, அசோஸ்பைரில்லம்,  ரைசோபியம்,  அசட்டோபேக்டர்,  குளுக்கான் அசிட்டோபாக்டர்,  நீலப் பச்சைப் பாசி மற்றும் அசோலா ஆகியவை தழைச்சத்தை நிலைநிறுத்தப் பயன்படும் நுண்ணுயிர் உரங்கள் ஆகும்.  பாஸ்போபாக்டீரியா மற்றும் வேர் உள்பூசணம் ஆகியவை மணிச்சத்தைக் கரைத்து பயிருக்கு அளிக்கும் நுண்ணுயிர் உரங்கள் ஆகும். தானியப் பயிர்களான நெல்,  மக்காச்சோளம்,  சோளம்,  கம்பு,  ராகி, சாமை, தினை மற்றும் வரகு ஆகியவற்றை விதைப்பு செய்யும்போது பரிந்துரைக்கப்பட்ட அளவு அதாவது 200 கிராம் அசோஸ்பைரில்லம் மற்றும் 200 கிராம் பாஸ்போபாக்டீரியா நுண்ணுயிர் உரங்களை 500  மி.லி. ஆறிய அரிசிக் கஞ்சியுடன் கலந்து கலவை தயார் செய்து அதில் ஓர் ஏக்கருக்குத் தேவையான விதையைக் கலந்து, நிழலில் உலர்த்தி பின்பு விதைப்பு செய்ய வேண்டும்.  பயறு வகைப் பயிர்களான துவரை,  உளுந்து,  பாசிப்பயறு, காராமணி மற்றும் அவரை ஆகியவற்றை விதைப்பு செய்யும்போது 200 கிராம் ரைசோபியம் மற்றும் 200 கிராம் பாஸ்போபாக்டீரியா நுண்ணுயிர் உரங்களுடன்  விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும்.  
நுண்ணுயிர் உர விதை நேர்த்தி செய்வதன் பயன்கள்: அசோஸ்பைரில்லம் காற்றில் இருக்கும் தழைச்சத்தை நிலை நிறுத்துவதோடு,  பயிர் வளர்ச்சிக்குத் தேவைப்படும் வளர்ச்சி ஊக்கிகளை உற்பத்தி செய்து, பயிர்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.  ரைசோபியம் பயிர்களில் வேர் முடிச்சுகளை உண்டாக்கி, அதன் மூலம் காற்றில் இருக்கும் தழைச்சத்தை நிலைநிறுத்தி பயிர்களுக்கு அளிக்கின்றது.  பாஸ்போபாக்டீரியாவுடன் விதைநேர்த்தி செய்வதால்,  நுண்ணுயிர்கள் தன் செல்களில் இருந்து சுரக்கும் அங்கக அமிலங்கள் மூலமாக மண்ணில் கரையாமல் இருக்கும் மணிச்சத்தைக் கரைத்து பயிர்கள் எடுத்துக்கொள்ளும் நிலைக்கு மாற்றிக் கொடுக்கின்றன.  விதைகளின் முளைப்புத் திறன் அதிகரிக்கப்படுகிறது.  மேலும்,  நாற்றுகளின் வேர் மற்றும் பயிர் வளர்ச்சி அதிகரிக்கப்படுகிறது.  பயிர்களில் வறட்சி தாங்கும் தன்மை மற்றும் நோய் எதிர்ப்புத் தன்மை ஆகியவை மேம்படுத்தப்படுகின்றன.  நுண்ணுயிர்களினால் மண்ணில் அங்ககப் பொருள்களின் அளவு அதிகரிக்கப்பட்டு, மண்வளம் மேம்படுத்தப்படுகிறது.  நுண்ணுயிர் உரங்கள் ரசாயன உரங்களைப் போல் இல்லாமல்,  பயிர்களுக்கு இடப்பட்டதும் மண்ணில் இனப்பெருக்கம் அடைந்து அதன் மூலம் தொடர்ந்து பயிர்களுக்கு சத்துகளை உற்பத்தி செய்து கொடுக்கின்றன.  பயிர்களின் மகசூல் 15 சதவீதம் வரை அதிகரிக்கிறது. நுண்ணுயிர் உரங்களை உபயோகிப்பதால் மண் வளம் மேம்படுத்தப்படுவது மட்டுமல்லாமல்,  சுற்றுப்புறச் சூழலும் பாதுகாக்கப்படுகிறது. எனவே,  விவசாயிகள் விதைகளை மானாவாரியில் விதைப்பு செய்யும்போது நுண்ணுயிர் உரங்களுடன் விதைநேர்த்தி செய்து விதைப்பதன் மூலம் பயிர் எண்ணிக்கை மற்றும் வளர்ச்சி அதிகரிக்கப்பட்டு, அதிக மகசூல் பெறலாம் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com