காய்கறி பயிரிடும் விவசாயிகளுக்கான விலை முன்னறிவிப்பு

காய்கறி பயிரிடும் விவசாயிகளுக்கான விலை முன்னறிவிப்பை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.


கோவை: காய்கறி பயிரிடும் விவசாயிகளுக்கான விலை முன்னறிவிப்பை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் பயிரிடப்படும் தக்காளி, கத்திரி, வெண்டை ஆகிய காய்கறி பயிர்களின் விலை முன்னறிவிப்பை விவசாயிகளின் நலன் கருதி வேளாண்மைப் பல்கலைக்கழக உள்நாட்டு, ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம் முன்னறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
தக்காளி: தேசிய தோட்டக்கலை வாரியத்தின் முதலாவது முன்கூட்டிய அறிக்கையின்படி 2018 -19-ஆம் ஆண்டில் இந்தியாவில் 8.14 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்யப்பட்டு 2.05 கோடி டன்கள் உற்பத்தியாகும் என்று அறிவித்துள்ளது. 
மத்தியப் பிரதேசம், ஆந்திரம், கர்நாடகம், தெலங்கானா, ஒடிஸா, மேற்கு வங்கம் ஆகியவை தக்காளியை அதிகமாக உற்பத்தி செய்கின்றன. தமிழகத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் தக்காளி உற்பத்தி செய்யும் முக்கிய மாவட்டங்களாகும்.
தமிழகத்தில் அனைத்துப் பருவங்களிலும் தக்காளி சாகுபடி செய்யப்படுகிறது.
கோவை சந்தைகளுக்கு நாச்சிபாளையம், ஆலாந்துறை, போளுவாம்பட்டி, கிணத்துக்கடவு ஆகிய பகுதிகளில் இருந்து தக்காளி அதிக அளவில் வருகிறது. கர்நாடக மாநிலம் தும்கூரில் இருந்து தக்காளி வரத்து அக்டோபர் முதல் தொடங்கியுள்ளது. இது டிசம்பர் மாத இறுதி வரை வரக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கத்திரி: தேசிய தோட்டக்கலை வாரியத்தின் முதலாவது முன்கூட்டிய அறிக்கையின்படி, இந்தியாவில் 7.35 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் கத்திரி சாகுபடி செய்யப்பட்டு 1.29 கோடி டன்கள் உற்பத்தியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கம், ஒடிஸா, பிகார், குஜராத், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் கத்திரி உற்பத்தியில் முன்னணியில் உள்ளன. தமிழகத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்கள் கத்திரி பயிரிடுவதில் பெரும் பங்கு வகிக்கின்றன. வர்த்தக மூலங்களின்படி கோவை, மதுரை, திருச்சி, ஒட்டன்சத்திரம் சந்தைகளுக்கு உள்ளூரில் இருந்தும் கர்நாடக மாநிலம், மைசூருவில் இருந்து போதுமான அளவு வரத்து உள்ளது.
வெண்டை: வெண்டை இந்தியாவில் பயிரிடப்படும் முக்கிய காய்கறிப் பயிர்களில் ஒன்றாகும். நாட்டில் 5.11 லட்சம் ஹெக்டேர் பரப்பில் வெண்டை பயிரிடப்பட்டு 62.19 லட்சம் டன்கள் உற்பத்தியாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
வெண்டைக்காய் உற்பத்தியில் மேற்கு வங்கம், குஜராத், பிகார், ஒடிஸா, மத்தியப் பிரதேச மாநிலங்கள் முன்னணியில் உள்ளன. தமிழகத்தில் சேலம், தேனி, தருமபுரி, திருவள்ளூர், கோவை, மதுரை மாவட்டங்கள் வெண்டை உற்பத்தியில் முன்னிலை வகிக்கின்றன. கோவை சந்தைகளுக்கு திருச்சி, தலைவாசல், வைகுந்தம், ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளில் இருந்து வெண்டைக்காய் வரத்து அதிக அளவில் உள்ளது. 
இந்த சூழலில் விவசாயிகள் விற்பனை முடிவுகளை எடுக்க ஏதுவாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இயங்கி வரும் வேளாண், ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டம், கடந்த 12 ஆண்டுகளாக ஒட்டன்சத்திரம் சந்தையில் நிலவிய தக்காளி, கத்திரி, வெண்டைக்காய் விலைகள் குறித்து சந்தை ஆய்வு மேற்கொண்டது.
இந்த ஆய்வின் அடிப்படையில் அறுவடையின்போது, தரமான தக்காளியின் பண்ணை விலை கிலோ ரூ.18 முதல் ரூ.20 வரையும், நல்ல தரமான கத்திரியின் விலை ரூ.25 முதல் 27 வரையும், வெண்டைக்காயின் விலை ரூ.20 முதல் ரூ.22 வரை இருக்கும் என்றும், இதன் அடிப்படையில் விவசாயிகள் விதைப்பு முடிவுகளை எடுக்கும்படியும் பரிந்துரைக்கப்படுகின்றனர்.
வடகிழக்குப் பருவ மழையைப் பொருத்து காய்கறிகளின் விலையில் மாற்றங்கள் இருக்கலாம் என்று அறிவித்துள்ள பல்கலைக்கழகம். இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண், ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தையோ, காய்கறிப் பயிர்கள் துறைத் தலைவரையோ அணுகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்பு எண்கள் 
0422 2431405, 6611374.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com