மழைக்காலங்களில் நெற்பயிரைக் காக்கும் வழிமுறைகள்

மழைக் காலங்களில் பாதிக்கப்படும் நெற்பயிரைக் காக்கும் வழிமுறைகள் குறித்து நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் முனைவர் ராஜா.ரமேஷ் மற்றும் முனைவர்
மழைக்காலங்களில் நெற்பயிரைக் காக்கும் வழிமுறைகள்

மழைக் காலங்களில் பாதிக்கப்படும் நெற்பயிரைக் காக்கும் வழிமுறைகள் குறித்து நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகள் முனைவர் ராஜா.ரமேஷ் மற்றும் முனைவர் மு.ராமசுப்பிரமணியன் ஆகியோர் வெளியிட்ட தகவல்:

காவிரி பாசனப் பகுதியில் தற்போது தொடர்ந்து பெய்துவரும் மழையின் காரணமாக பள்ளக்கால் பகுதிகள் அல்லது வடிகால் வசதியில்லாத நிலங்களில் தண்ணீர் தேங்கி சம்பா, தாளடி பருவங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பல்வேறு நிலையில் உள்ள நெற்பயிர்களுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.  எனவே கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்றினால் தண்ணீரில் மூழ்கிய நெற்பயிர்களைப் பாதுகாக்க முடியும்.  

தண்ணீரை வடிகட்டி பயிர் எண்ணிக்கையை பராமரித்தல்: 
    தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் வடிகால் வசதியை அதிகப்படுத்தி நெற் பயிரானது மூழ்காத அளவு தண்ணீரை வெளியேற்ற வேண்டும். அதனால் வேர்ப் பகுதிகளில் நல்ல காற்றோட்டம் உண்டாகும்.
   இளம் நெற்பயிர்களானது கரைந்து போவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே, அவ்வாறான சமயங்களில் அதே ரகம் மற்றும் வயதுடைய நாற்றுகளை கரைந்து போன இடங்களில் மீண்டும் நடவு செய்து பயிர் எண்ணிக்கையை சரியாகப் பராமரிக்க வேண்டும். சற்று வயதான நெற்பயிராக இருந்தால், வயலில் அதிக தூர்கள் இருக்கும் குத்திலிருந்து சில தூர்களைப் பிடுங்கி, கரைந்து போன இடங்களில் நட்டு பயிர் எண்ணிக்கையை சரியாகப் பராமரிக்க வேண்டும்.

நெற்பயிரானது தண்ணீரில் மூழ்குவதால்  உண்டாகும் பாதிப்புகள்:
  தண்ணீர் தேங்கிய நிலையில் நெற்பயிருக்கு  பிராண வாயு சரிவர கிடைக்காமல் வேர்களின் சுவாச இயக்கம் பாதிக்கப்படும்.    பிராண வாயு பயிருக்கு கிடைக்காமல் போவதால் அதனைச் சார்ந்த நுண்ணுயிரிகளின் செயல்பாடுகள் குறைந்துவிடும் அல்லது நின்றுவிடும்.

  மண் அதிகம் குளிர்ந்து விடுவதால் இயற்கையாக மண்ணில் காணப்படும் வெப்பம் குறைந்து மண் மீண்டும் வெப்பம் அடைய அதிக கால அவகாசம் எடுத்துக் கொள்ளும். இந்த குளிர்ந்த நிலையில் மணிச்சத்து, சாம்பல்சத்து, துத்தநாக மற்றும் தாமிரச்சத்துகளைப் பயிர் எடுத்துக்கொள்ளும் அளவு குறைந்து விடுவதால் உண்டாகும் பற்றாக்குறையினால் நெற்பயிரின் வளர்ச்சி தடைபடும்.     மழைநீர் வடியும் போது நீருடன் மண்ணிலுள்ள தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து, போரான், சுண்ணாம்பு மற்றும் மாங்கனீசு சத்துகளின் கரைதிறன் அதிகமாகி தண்ணீரோடு  கலந்து வெளியேறிவிடும். இதனால் நெற்பயிர்களுக்கு வேண்டிய ஊட்டச்சத்து  சரிவர கிடைப்பதில் தடை ஏற்படும்.    குளிர்ச்சியான வெப்பநிலையில் அங்ககப் பொருள்கள் பதனமாற்றமாகி சத்துகளாக உருமாற்றமாவது பாதிக்கப்படுவதால் பயிருக்கு கந்தகச்சத்து பற்றாக்குறை ஏற்பட்டு பயிரின் தோகைகள் மஞ்சள் நிறமாக மாறிக் காணப்படும். 

மண்ணில் இரும்புச்சத்து அதிகமாகி மாங்கனீசு சத்துக் குறைந்து இலைகளின் விகிதாசாரம் பாதிக்கப்பட்டு இரும்பின் அளவு அதிகமாவதால் இலைகள் மஞ்சள் நிறமாக மாறும். மாங்கனீசு சத்தின் பற்றாக்குறையினால் இலைப்புள்ளி நோய்கள் உண்டாகும். 
தண்ணீரில் மூழ்கிய நெற்பயிருக்கான ஊட்டச்சத்து மேலாண்மை முறைகள்:
   வெள்ளநீர் வடிந்தவுடன் தழைச்சத்து உரத்தை அம்மோனியா வடிவில் இடவேண்டும். அதற்கு யூரியாவை நேரடியாக பயிருக்கு அளிக்க வேண்டும்.   ஒரு ஏக்கருக்கு 22 கிலோ யூரியாவுடன் 18 கிலோ ஜிப்சம் மற்றும் 4 கிலோ வேப்பம் புண்ணாக்கு கலந்து 1 நாள் இரவு வைத்திருந்து  மறுநாள் இத்துடன் 17 கிலோ மூரியேட் ஆப் பொட்டாஷ் கலந்து வயலில் சீராக இட வேண்டும்.  நுண்ணூட்ட உரக்கலவையினையும் மேலுரமாக  தெளிக்க வேண்டும். 
   இலை வழி உரமாக அளிக்க வேண்டுமெனில் ஒரு ஏக்கருக்கு 2 கிலோ யூரியாவுடன்  1 கிலோ ஜிங்க் சல்பேட்டை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து காலை அல்லது மாலை வேளைகளில் தெளிக்க வேண்டும் அல்லது மணிச்சத்தை டி.ஏ.பி. உரத்தின் மூலமாக 2 சத அளவில் தெளிக்க
வேண்டும் அதாவது ஒரு ஏக்கருக்கு 4 கிலோ டி.ஏ.பி. உரத்தை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து ஓர் இரவு முழுவதும் வைத்திருந்து மறுநாள் காலை வடித்து தெளிந்த நீருடன்  2 கிலோ பொட்டாஷ் உரத்தினையும் சேர்த்து 190 லிட்டர் தண்ணீரில் கலந்து காலை அல்லது மாலை வேளையில் தெளிக்கவேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com