மைசூரு: கர்நாடகத்தில் காங்கிரஸ்-மஜத கூட்டணி அரசு 5 ஆண்டு ஆட்சியை முழுமையாக நிறைவு செய்யும் என்று முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
மைசூரில் உள்ள தனது இல்லத்தில் சித்தராமையா ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:
கர்நாடகத்தில் காங்கிரஸ்-மஜத கூட்டணி அரசு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. கூட்டணி அரசு 5 ஆண்டுகள் ஆட்சியை முழுமையாக நிறைவு செய்யும்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை தன்வசப்படுத்தி, ஆட்சியைக் கவிழ்க்க பாஜக தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சி ஒருபோதும் பலிக்காது.
விவசாயிகளின் கடனை முதல்வர் குமாரசாமி தள்ளுபடி செய்துள்ளார். இதற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. கர்நாடகத்தில் அமைச்சரவை விரிவாக்கத்தை அக்டோபர் முதல் வாரத்தில் மேற்கொள்ள முடிவு செய்துள்ளோம். கூட்டணி அரசின் பிரச்னைகளைத் தீர்த்து வைக்கும் நோக்கில்தான் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்தப் பணியை சிறப்பாகச் செய்வேன் என்ற நம்பிக்கை உள்ளது.
மைசூரு மாநகராட்சியில் மேயர், துணை மேயர் தேர்வு செய்வது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. வழக்கு விசாரணை முடிந்த பின்னர் தேர்தல் நடைபெறும். இந்தப் பதவிகளுக்கு உரிய நபர்களைத் தேர்ந்தெடுக்கத் திட்டமிட்டுள்ளோம் என்றார் சித்தராமையா.