தார்வாட்டில் இடிந்து விழுந்த கட்டடத்தில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர். 65-க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இடிபாடுகளில் மேலும் சிலர் சிக்கியிருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
தார்வாட் குமரேஸ்வரநகரில் அடுக்குமாடிக் கட்டடப் பணிகள் நடைபெற்று கொண்டிருந்த போது செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் திடீரென கட்டடம் சரிந்து விழுந்தது. இதில் கீழ்மாடியிலிருந்த கடைகள், ஹோட்டல்கள் உள்பட கட்டுமானப் பணிகளில் ஈடுபட்ட பலர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.
இதையடுத்து, அங்கிருந்த பொதுமக்கள், தீயணைப்பு படையினர் உதவியுடன் மீட்புபணியில் ஈடுபட்டனர். அதில் இறந்த நிலையில் சலீம் மகந்தர் (28) என்பவரின் சடலத்தை மீட்டனர். இரவு முழுவதும் நடைபெற்ற மீட்புப்பணியில் மேலும் 4 பேரின் உடல்கள் இறந்த நிலையில் மீட்கப்பட்டது. காயமடைந்த 65-க்கும் மேற்பட்டவர்களும் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
காயமடைந்தவர்களை அமைச்சர் ஆர்.வி.தேஷ்பாண்டே, மக்களவை உறுப்பினர் பிரஹலாத்ஜோதி, எம்.எல்.சி பசவராஜ் ஹொரட்டி உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறினர். கட்டடம் இடிந்து விழுந்தது தொடர்பாக, கட்டடத்தின் உரிமையாளர்கள் கங்கண்ணாஷிந்திரி, ரவி சோபாராதா, ராஜுகாட்டீன், பசவராஜ் நிகதி, மகதேஷ்வரா, பொறியாளர் விவேக்குமார் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இடிபாடுகளில் பலர் சிக்கியிருக்கக் கூடும் எனக் கருதுவதால், இறந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.