மாநகராட்சி விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட கட்டடத்தின் உரிமையாளர், ஒப்பந்ததாரரை போலீஸார் கைது செய்தனர்.
பெங்களூரு மார்த்தள்ளி வார்டு அஸ்வத்நகரில் சிவபிரசாத் என்பவருக்குச் சொந்தமான இடத்தில் 4 அடுக்குமாடிக் கட்டடம் உள்ளது. இக் கட்டடம் அண்மையில் லேசாக சாய்ந்தது. இதனால், கட்டடம் இடிந்து விழக்கூடும் என அப்பகுதியில் உள்ளவர்கள் அச்சம் கொண்டனர். இந்த நிலையில், அந்த கட்டடம் மாநகராட்சியின் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளது தெரியவந்தது.
இதையடுத்து அக் கட்டடத்தை இடிக்க மாநகராட்சி உத்தரவிட்டது. மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்த எச்.ஏ.எல் போலீஸார், கட்டட உரிமையாளர் சிவபிரசாத், ஒப்பந்ததாரர் வெங்கடேஷப்பா ஆகியோரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.