தசரா திருவிழா: 2,500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தசரா திருவிழாவை முன்னிட்டு 2,500 சிறப்பு பேருந்துகளை இயக்க கர்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.

தசரா திருவிழாவை முன்னிட்டு 2,500 சிறப்பு பேருந்துகளை இயக்க கர்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது.
இதுகுறித்து போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
தசரா திருவிழாவை முன்னிட்டு பெங்களூரிலிருந்து மாநிலத்தின் பல்வேறு நகரங்களுக்கு அக்.17 முதல் 22-ஆம் தேதி வரை கூடுதலாக 2,500 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன. சிறப்பு பேருந்துகள் பெங்களூரில் உள்ள கெம்பே கெளடா பேருந்து நிலையம், மைசூரு சாலை துணை பேருந்து நிலையம், சாந்திநகர் பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கப்படுகின்றன. சிறப்பு பேருந்துகளில் பயணிக்க முன்பதிவு செய்து கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 
கெம்பே கெளடா பேருந்து நிலையத்தில் இருந்து தர்மஸ்தலா, குக்கேசுப்ரமணியா, சிவமொக்கா, ஹாசன், மங்களூரு, குந்தாபுரா, சிருங்கேரி, ஹொரநாடு, தாவணகெரே, ஹுப்பள்ளி, தார்வாட், பெலகாவி,விஜயபுரா, கோகர்ணா, சிர்சி, கார்வாட், ராய்ச்சூரு, கலபுர்கி,பெல்லாரி, கொப்பள், யாதகிரி, பீதர், திருப்பதி உள்ளிட்ட இடங்களுக்கும்; மைசூரு சாலை துணை பேருந்து நிலையத்தில் இருந்து மைசூரு, ஹுன்சூர், பிரியாப்பட்டணா, விராஜ்பேட்டை, குஷால்நகர், மெர்கரா உள்ளிட்ட இடங்களுக்கும் சிறப்புபேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இவை தவிர மதுரை, கும்பகோணம், உதகை, கொடைக்கானல், சேலம், புதுக்கோட்டை, திருச்சி, சென்னை, கோயமுத்தூர், திருப்பதி, விஜயவாடா, ஹைதராபாத், பஞ்சிம், சீரடி, புணே, எர்ணாகுளம், பாலக்காடு உள்பட தமிழகம் மற்றும் ஆந்திர மாநிலங்களின் பல்வேறு நகரங்களுக்கு சிறப்பு சொகுசுப் பேருந்துகள் சாந்திநகர் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது.
விஜயநகர், ஜே.பி.நகர், ஜெயநகர் 4-ஆவது பிளாக், 9-ஆவது பிளாக், ஜாலஹள்ளி குறுக்குத்தெரு, நவரங்(ராஜாஜிநகர்), மல்லேஸ்வரம் 18-ஆவது குறுக்குத்தெரு, கெங்கேரி சாட்டிலைட் பேருந்துநிலையங்களில் இருந்து சிவமொக்கா, தாவணகெரே, திருப்பதி, மங்களூரு, குந்தாபுரா, சிருங்கேரி, ஹொரநாடு, குக்கேசுப்ரமணியா, தர்மஸ்தலா உள்ளிட்ட இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
ஹாசன், மங்களூரு,சிக்மகளூரு, சிவமொக்கா, தாவணகெரே, ஹுப்பள்ளி, பெல்லாரி, ஹொசபேட் ஆகிய நகரங்களுக்கு செல்லும் முன்பதிவு செய்யாத பயணிகளுக்கு கெம்பே கெளடா பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.கலபுர்கி, பெல்லாரி, ராய்ச்சூரு, ஹொஸ்பேட், கொப்பள், யாதகிரி, பீதர் உள்ளிட்ட வடகிழக்கு பகுதி தடத்தை நோக்கி செல்லும் பேருந்துகளும் கெம்பே கெளடா பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும். 
மைசூரு மட்டும்: மைசூரு சாலை துணை பேருந்து நிலையத்திலிருந்து மைசூருக்கு மட்டும் 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும் சாமுண்டிமலை, கே.ஆர்.எஸ் அணை, ஸ்ரீரங்கப்பட்டணா, நஞ்சன்கூடு, மடிகேரி, மண்டியா, மளவள்ளி, எச்.டி.கோட்டை, சாம்ராஜ்நகர், ஹுன்சூர், கே.ஆர்.நகர், குண்டல்பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு 150 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 
சிறப்பு பேருந்துகளில் பயணிக்க  ‌w‌w‌w.‌k‌s‌r‌t​c.‌i‌n என்ற இணையதளம் வழியே முன்பதிவு செய்து கொள்ளலாம். பெங்களூரில் உள்ள 171, மைசூரில் உள்ள 17, மங்களூரில் உள்ள 35 உள்ளிட்ட 707 முன்பதிவு மையங்களில் சிறப்பு மற்றும் வழக்கமான பேருந்துகளுக்கு முன்பதிவு செய்துகொள்ளலாம். 
ஒரே பயணச்சீட்டில் 4 பேருக்கு மேற்பட்டோருக்கு முன்பதிவு செய்தால் 5 சதவீத தள்ளுபடியும், மறுபயணம் மேற்கொண்டால் 10 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. பெங்களூரு தவிர, மாநிலத்தின் இதர நகரங்களில் இருந்தும் வெவ்வேறு நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 
இந்த வசதியைப் பயணிகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com