மஜத-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைக் கவிழ்க்கும் எண்ணம் பாஜகவுக்கு இல்லை என அக்கட்சியின் மாநிலத் தலைவர் எடியூரப்பா தெரிவித்தார்.
இதுகுறித்து சிவமொக்காவில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசின் நாள்கள் எண்ணப்படுவதாகவும், அதையடுத்து பாஜக ஆட்சி அமைக்கப் போவதாகவும் எங்கள் கட்சியினர் கூறிவருவதில் அர்த்தமில்லை.
மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசின் தோல்விகளை மக்களிடம் கொண்டுசேர்க்கும் திறன்வாய்ந்த எதிர்க்கட்சியாக பாஜக செயல்படும். எனவே, மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசை கவிழ்க்கும் எண்ணம் பாஜகவுக்கு இல்லை. அப்படியொரு அரசியல் மாற்றம் ஏற்பட்டால், அப்போது பாஜகவின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்துவோம்.
ஏதாவதொரு காரணத்தால் கூட்டணி அரசு கவிழ்ந்தால், அந்த நிலைமைக்கு தகுந்தவாறு பாஜக செயல்படும். அதற்கு முன்பாக, கற்பனையில் எதையும் பேச விரும்பவில்லை என்றார் அவர்.
பாஜக முன்னாள் துணை முதல்வர் ஆர்.அசோக், பெங்களூரில் அக். 11-ஆம் தேதி பேசுகையில், அடுத்த ஓரிரு மாதங்களில் கர்நாடகத்தில் பாஜக சொந்தமாக ஆட்சி அமைக்கும். ஒவ்வொரு எம்.எல்.ஏ.வும் எங்களுக்கு முக்கியம். காங்கிரஸ், மஜதவில் அதிருப்தி அடைந்துள்ள எம்.எல்.ஏ.க்களுடன் நான் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன். எங்களுக்கு தேவைப்படும் எம்.எல்.ஏ.க்களை வைத்துக்கொண்டு, தேசியத் தலைவர்களுடன் கலந்துபேசி நல்ல முடிவு எடுப்போம் என்று கூறியிருந்ததைத் தொடர்ந்து, பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா தனது கருத்தை தெரிவித்துள்ளார். கூட்டணி அரசைக் கவிழ்க்க எம்.எல்.ஏ.க்களை இழுக்க முயற்சிப்பதாக காங்கிரஸ் மற்றும் மஜத ஆகிய கட்சிகள் பாஜகவை குறைகூறி வந்துள்ளன.
பகுஜன்சமாஜ் கட்சியின் ஒரே ஒரு அமைச்சராக இருந்த என்.மகேஷ் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளது குறித்து கேட்டதற்கு, "என்.மகேஷ் தனது அமைச்சர் பதவியிலிருந்து விலகியதற்கான காரணம் தெரியவில்லை' என்று எடியூரப்பா பதிலளித்தார்.