பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வுக்கு தார்மீக பொறுப்பேற்று பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என மஜத மாநிலத் தலைவர் எச்.விஸ்வநாத் தெரிவித்தார்.
கர்நாடக மாநிலம், மைசூரில் திங்கள்கிழமை பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு அவர் பேசியது: பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவை தினந்தோறும் விலை உயர்வைச் சந்தித்து வருகின்றன. இதனால், அத்தியாவசியப் பொருள்களின் விலைகளும் உயர்ந்துள்ளன.
பெட்ரோல், டீசல் சமையல் எரிவாயு உயர்வால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசின் நடவடிக்கைகளால் தொழில்துறையினரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்ற பிறகு நாடு அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்துள்ளது. இதற்கு தார்மீக பொறுப்பேற்று பிரதமர் நரேந்திர மோடி, தனது பதவியிலிருந்து விலக வேண்டும் என்றார் அவர்.