விநாயகர் சதுர்த்தி, தசரா, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வருவதால், ஊதுபத்திகளின் தேவை அதிகரித்துள்ளது என அகில இந்திய ஊதுபத்தி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் சரத்பாபு தெரிவித்தார்.
பெங்களூரில் திங்கள்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது: பெங்களூரு உள்ளிட்ட பல பகுதிகளில் ஊதுபத்தி உற்பத்தி குடிசைத் தொழிலாக உள்ளது. இத் தொழிலை நம்பி அதிகளவில் பெண்கள் உள்ளனர்.
சிறு, குறு தொழில்துறையில் ஊதுபத்தி உற்பத்தி உள்ளதால், இந்த தொழிலில் மெத்தப் படித்தவர்கள் யாரும் வருவதில்லை. ஏழை, நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்தவர்களே இந்த தொழிலில் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். பூஜை, திருவிழா, பண்டிகை காலங்களில் ஊதுபத்திக்கு அதிக வரவேற்புள்ளது.
கர்நாடகம் உள்ளிட்ட தேசிய அளவில் வரும் 4 மாதங்களுக்கு விநாயகர் சதுர்த்தி, தசரா, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் வருவதால், ஊதுபத்திகளின் தேவை அதிகரித்துள்ளது. ஊதுபத்தி தொழிலை நம்பியுள்ள சிறு, குறுந்தொழில் நிறுவனங்கள் மட்டுமின்றி, ஏழை, நடுத்தரக் குடும்பங்களும் இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ளன.
நலிந்து வரும் சிறு, குறு தொழில்நிறுவனங்களை மேம்படுத்த அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர். பேட்டியின் போது, அச்சங்கத்தின் மேலாண்மைக் குழு உறுப்பினர் எஸ்.ஜி.விஜய் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.