பயிர்க் கடன் தள்ளுபடி திட்டத்துக்கே அதிக நிதி ஒதுக்கப்படுவதாகக் கூறுவதில் உண்மையில்லை; வளர்ச்சித் திட்டத்துக்கும் நிதி சமமாக பகிர்ந்தளிக்கப்படுவதாக முதல்வர் குமாரசாமி விளக்கமளித்தார்.
இதுகுறித்து மைசூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
வளர்ச்சிப் பணிகளுக்கு நிதியை ஒதுக்காமல், அனைத்து நிதியையும் பயிர்க் கடன் தள்ளுபடி திட்டத்துக்கு ஒதுக்கிவிட்டதாகக் கூறப்படுவதில் உண்மையில்லை. வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்காகவே ரூ.2.18 லட்சம் கோடியை பல்வேறு துறைகளுக்கு பட்ஜெட் மூலம் ஒதுக்கியுள்ளேன். எனவே, வளர்ச்சித் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை பயிர்க் கடன் தள்ளுபடி திட்டத்துக்கு மாற்றப்படுவதாகக் கூறுவதில் உண்மையில்லை.
தேசிய வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் தொகை ரூ.30 ஆயிரம் கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. பயிர்க்கடன் தள்ளுபடியை நான்கு தவணைகளில் அடைக்க திட்டமிட்டுள்ளோம். இதற்கான திட்டத்தை நவம்பரில் அறிவிப்பேன். எனது கருத்தை வங்கிகளும் ஏற்றுக் கொண்டுள்ளன. நிதி வீணாவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.