கர்நாடகத்தில் காங்கிரஸ்-மஜத கூட்டணி ஆட்சியைக் கவிழ்க்கும் பாஜகவின் முயற்சி பலனளிக்காது என அந்த மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.
பெங்களூரு சதாசிவநகரில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
காங்கிரஸ்- மஜத கூட்டணி ஆட்சியைக் கவிழ்க்க பாஜக தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இதற்காக காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் குதிரைபேரம் நடத்தியும், பதவி ஆசை காட்டியும் பின்கதவு வழியாக ஆட்சியைப் பிடிக்க பாஜக முயற்சித்து வருகிறது. இதன்மூலம் ஆட்சியைப் பிடிப்பதற்காக பாஜக எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக உள்ளது தெளிவாகிறது.
ஆனால், பாஜகவினரின் ஆசை வார்த்தைக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மயங்கவில்லை. காங்கிரஸ் கட்சியில் போர்க்கொடி தூக்கியுள்ளதாகக் கூறப்படும் ரமேஷ் ஜார்கிஹோளி, சதீஷ் ஜார்கிஹோளி சகோதரர்கள் காங்கிரஸ் கட்சியிலே நிலைத்துள்ளனர். ஜார்கிஹோளி சகோதரர்கள் காங்கிரஸ் கட்சியின் மீது அதிருப்தி உள்ளதாகக் கூறப்படுவதில் உண்மை இல்லை. இதனால், கூட்டணி ஆட்சியைக் கவிழ்க்கும் பாஜகவின் கனவு ஒரு போதும் பலிக்காது என்றார்.