கர்நாடக நலனுக்காக பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து பேசியதை அரசியலாக்க வேண்டாம் என முன்னாள் பிரதமர் தேவெ கெளடா தெரிவித்தார். இதுகுறித்து ஹாசனில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
பிரதமரைச் சந்திக்கும் அரசியலமைப்புச் சட்டப்படியான அதிகாரத்தை நானும், எனது மகனும், முதல்வருமான குமாரசாமியும் பெற்றுள்ளோம். மாநில நலனுக்காக பிரதமரைச் சந்தித்து நாங்கள் பேசியதை சிலர் அரசியலாக்கி வருவது அவசியமற்றது. கர்நாடகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு குறித்து முறையிட்டதையடுத்து, ஆய்வு செய்வதற்காக இரு குழுக்களை கர்நாடகம் அனுப்பிவைப்பதாக மோடி உறுதியளித்துள்ளார். பிரதமர் மோடியைச் சந்தித்த குழுவில் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் இடம் பெற்றிருந்தனர். எனவே, இதற்கு அரசியல்சாயம் பூசவேண்டிய அவசியமில்லை.
கூட்டணியில் பிளவு இல்லை
கர்நாடகத்தில் தற்போது நடைபெற்றுவரும் அரசியல் நடவடிக்கைகள் எனக்கு சரியாகபடவில்லை. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பரஸ்பரம் தெரிவித்துவரும் கருத்துகள் வருத்தமளிக்கிறது. கூட்டணி அரசு குறித்து ஊடகங்களும், தலைவர்களும் தங்களது ஊகங்களை வெளிப்படுத்துவது சரியல்ல. மஜத-காங்கிரஸ் கூட்டணி மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கூட்டணி அரசை கவிழ்க்க யாராலும் முடியாது. மாநில மக்களின் நலன் கருதி கூட்டணி அரசு நிலைக்குமா? நிலைக்காதா? என்று செய்தி வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் என்றார்.