முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலடைக்கப்பட்டுள்ள முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலையை தமிழக ஆளுநர் நிராகரிக்க வேண்டும் என கர்நாடக காங்கிரஸ் தொழிலாளர் பிரிவுத் தலைவர் எஸ்.எஸ்.பிரகாசம் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து பெங்களூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வதற்கு தமிழக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.
தமிழக அரசின் பரிந்துரையை ஆளுநர் நிராகரிக்க வேண்டும். பயங்கரவாதத்துக்கு யாரும் ஆதரவாக இருக்கக் கூடாது. பயங்கரவாதத்தில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். தமிழர்களை நம்பி, தமிழ்நாட்டுக்கு வந்த ராஜீவ் காந்தியைக் கொன்றவர்களை யாரும் மன்னிக்கக் கூடாது. பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் மதம், இனம், மொழி என்ற பாகுபாடு கூடாது என்றார்.