வழிப்பறி, கொள்ளை வழக்குகளில் ஈடுபட்ட 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.
பெங்களூரு எலஹங்கா புட்டராஜப்பா பிளாக்கைச் சேர்ந்தவர் ரஞ்சித் (25), எலஹங்கா விவசாயிகள் சங்கத்தின் அருகே வசிப்பவர் ரோஹித் (25), மாருதி நகரைச் சேர்ந்தவர் வினய் (19), புதிய நகரைச் சேர்ந்தவர் சீமந்த் (19). இவர்கள் 4 பேரும் பட்டப் பகலில் வீடுகளில் புகுந்து, வீட்டில் உள்ளவர்களை கட்டிப்போட்டு கொள்ளையடிப்பதையும், தனியாக செல்பவர்களை கத்தி முனையில் மிரட்டி வழிப்பறியில் ஈடுபடுவதையும் வழக்கமாக கொண்டிருந்தனராம்.
இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸார், ரஞ்சித், ரோஹித், வினய், சீமந்த் ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள், 2 செல்லிடப்பேசிகள், 3 கைக்கடிகாரம், 5 கத்திகளை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 4 பேரிடமும் எலஹங்கா போலீஸார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.