மக்களுக்கும் எவ்வித நன்மையும் செய்யாத பாஜகவை புறக்கணிக்க வேண்டும் என்றார் கர்நாடக முதல்வர் குமாரசாமி.
இதுகுறித்து ஹாசனில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதைத் தடுக்கும் நோக்கில் கர்நாடகத்தில் ஹெலிகாப்டர் தட்டுப்பாட்டை மத்திய பாஜக அரசு உருவாக்கியுள்ளது. இது தொடர்பாக வழிகாட்டுதலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
கர்நாடகத்தில் மிகவும் மலிவான அரசியலில் பாஜக ஈடுபட்டுள்ளது. 2014-ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலை இம்முறை பிரதமர் மோடி எளிதாக வெற்றிக்கனியை பறித்துவிட முடியாது. அதுகுறித்து நான் தற்போது பேசவிரும்பவில்லை. ஆனால், நாட்டில் நடைபெற்றுவரும்நிகழ்வுகளை உற்றுநோக்கினால், பிரதமர் மோடியால் மக்களவைத் தேர்தலை வெல்வது அவ்வளவு எளிதானல்ல என்பது புரிகிறது.
எதிர்க்கட்சிகளின் கூட்டணியை பிரதமர் மோடி கிச்சடி என்று வர்ணித்திருக்கிறார். இது அவரதுபதவிக்கு அழகல்ல. எங்களை எப்படி அழைத்தாலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 13 கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. தனது ஆட்சிக் காலத்தில் மக்களுக்கு நன்மை செய்யும் திட்டங்கள் ஏதாவது செய்திருந்தால், மாநிலக்கட்சிகளின் ஆதரவை ஏன் பிரதமர் மோடி நாடுகிறார்? மக்களவைத் தேர்தலுக்கு பிறகு தேசிய அரசியலில் மஜத தேசியத் தலைவரும், முன்னாள் பிரதமருமான எச்.டி.தேவெகெளடாவுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.
எனவே, கர்நாடக மக்கள் மக்களவை தேர்தலில் பாஜகவை புறக்கணிக்க வேண்டும். 28 தொகுதிகளிலும் மஜத-காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்குகளை அளித்து வெற்றிபெற செய்யவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மத்தியில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பு கிடைத்தால், கர்நாடகத்தின் பிரச்னைகளுக்கு வெகு எளிதாக தீர்வுகாணப்படும்.
பாஜகவை வீட்டுக்கு அனுப்புவதற்கு மக்களுக்கு கிடைத்த நல்லவாய்ப்பு மக்களவைத் தேர்தல். இந்த வாய்ப்பை மக்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கர்நாடகத்தில் உள்ள 28 இடங்களிலும் கூட்டணி வேட்பாளர்கள் வென்றால், மத்தியில் அமையும் அரசு கர்நாடகத்தின் கோரிக்கைகளை உடனடியாக தீர்க்கும் என்றார்.