மக்களவைத் தேர்தல் முடிவுகள் கர்நாடக கூட்டணி அரசின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என்று முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தார்.
பெங்களூரில் புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர்
பேசியது:
பாஜகவை அதிகாரத்திலிருந்து அகற்றுவதற்காக காங்கிரஸ், மஜத கூட்டணி வைத்துள்ளன. மக்களவைத் தேர்தல் முடிவுகள் காங்கிரஸ்- மஜத கூட்டணி அரசின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். முதல்வர் குமாரசாமிக்கும் இந்தத் தேர்தல் முடிவுகள் முக்கியமானதாக
அமையும்.
பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் அறிவிப்புகளாக மட்டுமே உள்ளன. மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் ஆட்சி நடைபெறவில்லை. விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக கர்நாடக அரசு கூறி வருகிறது. ஆனால், கடன் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு எந்தப் பயனும் கிடைக்கவில்லை.
பிரதமர் மோடியைத் தலைவராகக் கொண்டுள்ளதற்காக நான் பெருமைப்படுகிறேன். அவர் போன்ற தலைவர்கள்தான் நாட்டுக்கு தற்போது தேவை. நேர்மையாகவும், தைரியமாகவும் பேசும் தலைவர்களைத்தான் மக்கள் விரும்புகின்றனர்.
பண மதிப்பிழப்பு, துல்லியத் தாக்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் திடமாக முடிவெடுப்பதில் வல்லவர் என்பதனை மோடி நிரூபித்து வருகிறார். அரசியல் ராஜ தந்திரத்திலும் அவர் சிறந்து விளங்குகிறார். யார் என்ன கூறினாலும், தேர்தலில் வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமராக
வேண்டும்.
குடும்ப அரசியலை ஆரம்பத்திலிருந்தே எதிர்த்து வருகிறேன். அரசியலில் வாரிசுகளின் தலையீடு எப்போதும் இருக்கக் கூடாது. குடும்பத்தின் பெயரைப் பயன்படுத்தி அரசியலில் கால் பதிப்பது எந்த விதத்தில் நியாயம்? குடும்பத்தின் பெயரைக் கூறி அரசியலில் யார் ஈடுபட்டாலும், அதனை ஏற்க மாட்டேன். காங்கிரஸ் கட்சி ஒரு குடும்பத்தின் சொத்தாகியுள்ளது. இது ஜனநாயகத்துக்கு ஆபத்தானது என்றார்.