மின் கடத்திகளை மாற்றுவதற்கான புதிய தொழில்நுட்பத்தை ஸ்டெர்லைட் பவர் நிறுவனத்தின் மூத்த செயல் அதிகாரி மனீஷ் அகர்வால் தெரிவித்தார்.
பெங்களூரில் செவ்வாய்க்கிழமை மின் கடத்திகளை மாற்றுவதற்கான புதிய தொழில்நுட்ப அறிமுக விழாவில் கலந்து கொண்டு அவர் பேசியது:
பெங்களூரு, தில்லி, சென்னை போன்ற நகரங்களில் உயர்நிலை மின் அழுத்தம் கொண்ட மின் கடத்திகள் உள்ளன. இந்த மின் கடத்திகளை மாற்றுவதற்கு, மின்சாரத்தை தடை பின்னர் அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது வளர்ந்த நகரங்களில் மின் சாரத்தை 2 அல்லது 3 மணி நேரத்திற்கு மேல் தடை செய்வது என்பது இயலாத காரியமாக உள்ளது.
எனவே, மின் தடையில்லாமல் மின் கடத்திகளை மாற்றுவதற்கான தொழில்நுட்பம் லைவ் லைனை அறிமுகம் செய்துள்ளோம். இதனால், பெரும் நகரங்களில் மின் தடையில்லாமல் மின் கடத்திகளை மாற்ற முடியும். பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் முதன்முறையாக லைவ் லைன் தொழில்நுட்பம் மூலம் 66 கிலோ வாட்ஸ் கொண்ட திட்டப் பணியை கர்நாடக மின்கழகத்தின் உதவியுடன் வெற்றிக்கரமாக செய்து முடித்துள்ளோம்.
இதற்கு அதிக அளவில் வரவேற்பு உள்ளதால், மேலும் பல நகரங்களில் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த மாநில அரசுகள் கோரிக்கை வைத்துள்ளன என்றார்.