பிரதமர் மோடியின் கையைப் பலப்படுத்த பாஜகவை ஆதரியுங்கள் என்று மத்திய பெங்களூரு பாஜக வேட்பாளர் பி.சி.மோகன் கேட்டுக் கொண்டார்.
பெங்களூரு ராஜாஜிநகர் தொகுதியில் திங்கள்கிழமை பாஜக பேரணியைத் தொடக்கிவைத்து பிரசாரத்தில் அவர் பேசியது: கடந்த 5 ஆண்டுகள் பாஜக ஆட்சியில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் நடைபெற்றுள்ளது. குறிப்பாக பெங்களூருக்கு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது. மெட்ரோ ரயில் திட்டங்கள், பொலிவுறு நகரம், புறநகர் ரயில் திட்டம் உள்ளிட்டவை இதில் அடங்கும். பாஜக ஆட்சியில்தான் இந்தியா சர்வதேச அளவில் புகழ்பெற்றுள்ளது.
குறிப்பாக பிரதமர் மோடியின் வெளிநாட்டு பயணங்களால் பல்வேறு நாடுகளுடனான நமது உறவு பலமாகியுள்ளது. ஊழலற்ற ஆட்சியால் மக்களின் வாழ்வாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது. பிரதமர் மோடியின் தொலைநோக்குத் திட்ட ஆட்சியை மக்கள் வரவேற்றுள்ளனர். அதன் பயனாக மக்களவைத் தேர்தலில் பாஜக மகத்தான வெற்றியை பெற உள்ளது.
மத்தியில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜக வேட்பாளர்களை ஆதரிப்பது அவசியம். பிரதமர் மோடியில் கையைப் பலப்படுத்த மக்கள் பாஜகவை ஆதரிக்க வேண்டும். பெங்களூரில் 3 மக்களவைத் தொகுதி உள்பட மாநில அளவில் 22 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்றார்.