தேர்தலில் தடையின்றி வாக்களிக்க கூடுதல் பேருந்துகள் இயக்கம்
மக்களவைத் தேர்தலுக்கு வாக்களிக்க சொந்த ஊருக்கு மக்கள் பயணிக்க தேவையான பேருந்துகளை இயக்க கர்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகம் ஏற்பாடுசெய்துள்ளது.
இதுகுறித்து கர்நாடகமாநில சாலை போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கர்நாடகத்தில் முதல்கட்ட மக்களவைத் தேர்தல் ஏப்.18-ஆம் தேதி நடக்கவிருக்கிறது. தேர்தல் பணிகளை கவனிக்க செல்லும் ஊழியர்கள் மற்றும் காவல் துறையினரை அந்தந்த தொகுதிகளுக்கு அழைத்து செல்வதற்காக 3300 பேருந்துகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எனினும், வாக்களிக்க பெங்களூரில் இருந்து மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு செல்ல விரும்பும் மக்கள் பயணிக்க தேவையான பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பேருந்து தேவை அதிகமிருக்கும் பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலும், குறைந்த தேவை இருக்கும் பகுதிகளில் குறைந்த பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. வட்டத் தலைநகரங்களுக்கு இடையே, மாவட்டத் தலைநகரங்களுக்கு இடையே கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகிறது. வட கர்நாடகத்தின் 14 தொகுதிகளில் ஏப்.23-ஆம் தேதி தேர்தல் நடக்கவிருக்கிறது. அப்போது பெங்களூரிலிருந்து கூடுதல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெங்களூரிலிருந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல ஏப்.17, 18-ஆம் தேதிகளில் பெங்களூரு மாநகரப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் இயக்கப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.