பழுதாகி நின்றிருந்த பயணிகள் வேன் மீது லாரி மோதிக் கொண்ட விபத்தில், கல்லூரி மாணவர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.
பெங்களூரு பசவனகுடியில் உள்ள விஜயா கல்லூரியில் பி.காம் பட்டப் படிப்பு படித்து வந்தவர்கள் கார்த்திக் (20), ஹர்ஷா (20), ஸ்ரீநிதி (20). இவர்கள் 3 பேர் உள்பட 13 பேர் கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி கோகர்னா உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா சென்றுவிட்டு, ஞாயிற்றுக்கிழமை இரவு பெங்களூருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
இந்த நிலையில், திங்கள்கிழமை அதிகாலை சித்ரதுர்கா ஜிஎம்ஐடி சதுக்கத்தில் பயணிகள் வேன் பழுதாகி நின்றுள்ளது. அப்போது வேகமாக வந்த லாரியானது வேன் மீது மோதியுள்ளது. இதில், பலத்த காயமடைந்த கார்த்திக், ஹர்ஷா, ஸ்ரீநிதி ஆகிய மூவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த மற்றவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து கோட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர்.