பேருந்துகளில் பயணச்சீட்டில்லாமல் பயணித்தவர்களிடம் அபராதமாக ரூ.7.52 லட்சம் வசூலிக்கப்பட்டது.
இதுகுறித்து கர்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மக்களின் நலன்கருதி கர்நாடகத்தின் அனைத்து பகுதிகளுக்கும், அண்டை மாநிலங்களுக்கும் போக்குவரத்துக் கழகம் சார்பில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்துகளில் பயணச்சீட்டு சோதனை கடந்த மார்ச் மாதத்தில் நடத்தப்பட்டது.
40,289 பேருந்துகளில் சோதனை நடத்தியதில் போக்குவரத்துக் கழகத்துக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக 4596 சம்பவங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டன. இதனடிப்படையில், பயணச்சீட்டில்லாமல் பயணித்த 5851 பேரிடம் இருந்து ரூ.7,52,806 அபராதமாக வசூலிக்கப்பட்டது. வருவாய் இழப்பு ஏற்படுத்திய ஓட்டுநர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.