கர்நாடகத்தில் மழை குறைந்துள்ளதால் நிவாரணப் பணிகள் தீவிரமடைந்துள்ளது.
வட கர்நாடகம், கடலோர மாவட்டங்கள், மலை மாவட்டங்கள் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் அண்மையில் பெய்த பலத்த மழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதில் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர். இதனால் 17 மாவட்டங்களில் 86 வட்டங்களில் 2,217 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. 41,915 வீடுகள் சேதமடைந்தன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 6.77 லட்சம் பேர் பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டனர்.
இதில் 4 லட்சம் பேர், 1,224 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழைக்கு 48 பேர் உயிரிழந்துள்ளனர்.
15 பேரை காணவில்லை. மழை வெள்ளத்தால் 4.30 லட்சம் ஹெக்டர் நிலத்தில் பயிர்கள் சேதமடைந்தன.
இந்த நிலையில் திங்கள்கிழமை முதல் கர்நாடகத்தின் 17 மாவட்டங்களில் மழை குறைந்துள்ள நிலையில், வெள்ள பாதிப்பும் குறைந்துள்ளது.
இதையடுத்து நிவாரணப் பணிகளை மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளது. மாநிலத்தில் வெள்ள சேதம் ரூ. 50 ஆயிரம் கோடி வரை இருக்கும் எனக் கூறியுள்ள மாநில அரசு முதல் கட்டமாக வெள்ள நிவாரண நிதியாக ரூ. 3 ஆயிரம் கோடியை மத்திய அரசிடம் கேட்டுள்ளது.