மாநிலத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறை அதிகாரிகள் 6 பேருக்கு மத்திய உள் துறை அமைச்சரின் பதக்கம் வழங்கப்படுகிறது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: குற்ற வழக்குகளில் சிறப்பாக செயல்பட்ட 6 போலீஸ் அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சரின் பதக்கம் வழங்கப்பட உள்ளது. அதன்படி, பத்திரிகையாளர் கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் சிறப்பு புலனாய்வுப் படையில் சிறப்பாக பணியாற்றி, தற்போது ஒயிட்பீல்டு காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வரும் அனுஜித், துணைக் காவல் கண்காணிப்பாளர் டி.ரங்கப்பா, ஆய்வாளர் ராஜு ஆகியோருக்கும், சிறுவர், சிறுமிகள் உள்ளிட்டோர் கடத்தல் வழக்குகளில் சிறப்பாக செயல்பட்ட சிஐடி பிரிவின் காவல் கண்காணிப்பாளர் ஜாஹன்வி, துணைக் காவல் கண்காணிப்பாளர் ரவிசங்கர். கோலார் மாவட்டம், மாலூரில் பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொலை செய்த வழக்கில் சிறப்பாக செயல்பட்டு துப்பு துலக்கிய காவல் ஆய்வாளர் சதீஷ் ஆகியோருக்கு மத்திய உள்துறை அமைச்சரின் பதக்கம் வழங்கப்பட உள்ளது.