போக்குவரத்து காவலர்கள் கவனத்துக்கு...
பணியின் போது செல்லிடப்பேசியைப் பயன்படுத்தும் போக்குவரத்து போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மைசூரு மாநகர துணை காவல் ஆணையர் முத்துராஜ் தெரிவித்தார்.
இதுகுறித்து புதன்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: மாநகரில் பல்வேறு பகுதிகளில் பணியில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து போலீஸார், செல்லிடப்பேசிகளை பயன்படுத்துவதாக பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்துள்ளன. இது தொடர்பாக விசாரணை நடத்தியதில் புகார்களில் உண்மை உள்ளது தெரியவந்துள்ளது. பணி நேரத்தில் செல்லிடப்பேசிகளைப் பயன்படுத்தினால், போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டுநர்களை கண்காணிக்க முடியாது.
எனவே, பணி நேரத்தில் போக்குவரத்து போலீஸார் யாரும் செல்லிடப்பேசிகளைப் பயன்படுத்தக் கூடாது. மீறினால் சம்பந்தப்பட்ட போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பணியின் போது முக்கிய தகவல் வந்தால், செல்லிடப்பேசியைப் பயன்படுத்த விலக்கு அளிக்கப்படும். தேவைப்படும் பட்சத்தில் அதற்கான விளக்கம், காரணத்தை சம்பந்தப்பட்ட போலீஸார் தர வேண்டும் என்றார்.