வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருள்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு சுங்கச் சாவடிகளில் வரி வசூலிப்பதற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் சதானந்த கெளடா கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து மத்திய சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது: கர்நாடகத்தில் வரலாறு காணாத மழை பெய்து, 17 மாவட்டங்களில் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக வட கர்நாடகத்தில் உள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வாகனங்கள் மூலம் நிவாரணப் பொருள்கள் கொண்டு செல்லப்படுகிறது. வட கர்நாடகத்துக்கு செல்லும் வழியில் 20 முதல் 30 இடங்களில் சுங்கச் சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் நிவாரணப் பொருள்களைக் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு வரி வசூலிப்பதற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று அவர் தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.