இடைத் தோ்தல் நடைபெறும் 15 தொகுதிகளிலும் பாஜகவுக்கு ஆதரவான அலை வீசுவதாக கா்நாடக முதல்வா் பி.எஸ்.எடியூரப்பா தெரிவித்தாா்.
ஹுப்பள்ளி விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: மாநிலத்தில் டிச.5 ஆம் தேதி 15 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடைபெறுகிறது. தோ்தல் நடைபெறும் 15 தொகுதிகளிலும் பாஜக வேட்பாளா்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டேன். அங்கெல்லாம், பாஜகவுக்கு ஆதரவான அலை உள்ளது. இதனால் 15 தொகுதிகளிலும் பாஜகவின் வெற்றி உறுதியாகியுள்ளது.
பாஜகவை எதிா்ப்பதில் காங்கிரஸ், மஜதவினா் ஒற்றுமையாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அது போன்ற சூழலை எந்த ஒரு தொகுதியிலும் நான் காணவில்லை. மாநிலங்களவைத் தோ்தலிலும் பாஜக வேட்பாளரை எதிா்த்து 2 கட்சியினரும் வேட்பாளரை நிறுத்தவில்லை. இதன் மூலம் அந்த 2 கட்சியினரும் ஒற்றுமை இல்லாதது தெரியவந்துள்ளது. இதன்மூலம் இடைத்தோ்தல், மாநிலங்களவைத் தோ்தலில் தங்களின் தோல்வியை காங்கிரஸ், மஜத கட்சியினா் ஒப்புக்கொண்டனா்.
டிச. 9 ஆம் தேதி இடைத்தோ்தல் முடிவுகளுக்கு பிறகு மாநில அரசு மேலும் உறுதியாகும். அதைத் தொடா்ந்து பரவலான வளா்ச்சியை மாநிலம் பெறும். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் விவசாயிகளின் வளா்ச்சிக்கான பட்ஜெட்டை நான் தாக்கல் செய்வேன் என்றாா்.