பெரம்பலூர் நகரில் செவ்வாய்க்கிழமை அதிகாலை ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து திருட முயன்ற இளைஞர் பிடிபட்டார்.
பெரம்பலூர் நகரின் பிரதான சாலையில் உள்ள வெங்கடேசபுரத்தில் தனியாருக்குச் சொந்தமான வங்கியின் முன்புறம் ஏ.டி.எம். மையம் உள்ளது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை இந்த ஏடிஎம் மையத்துக்குச் சென்ற இளைஞர் ஒருவர், தனது சட்டையை களைந்து அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை மூடிவிட்டு, கம்பியைக் கொண்டு ஏடிஎம் இயந்திரத்தை உடைத்தாராம்.
இதைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்தோர் சிலர் புறநகர் பேருந்து நிலையப் பகுதியில் ரோந்தில் ஈடுபட்டிருந்த உதவி ஆய்வாளர் பெரியசாமியிடம் தகவல் தெரிவிக்க, அவர் ஊர்க்காவல் படை வீரர் கண்ணனுடன் (35) அங்கு சென்றார். அப்போது கண்ணனைத் தாக்கிவிட்டு தப்ப முயன்ற அந்த இளைஞர் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைந்தார். இதையடுத்து, அப்பகுதி மக்கள் அவரை பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில், அவர் நாமக்கல் மாவட்டம், திருமலைப்பட்டி அருகே இடையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த துரைசாமி மகன் தனுஷ் (22) என்பதும், இவர், பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தனியார் பாதுகாப்புப் பணி கண்காணிப்பாளர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, தாக்குதலுக்குள்ளான ஊர்க்காவல் படை வீரர் கண்ணன், தனுஷ் ஆகிய இருவரும், பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
கண்ணன் அளித்த புகாரின்பேரில், பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். பெரம்பலூர் நகரின் மையப்பகுதியில், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் இச் சம்பவம் நிகழ்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.