பாஜக எம்எல்ஏ பிரீத்தம் கெளடாவின் வீடு மீது கல்வீசி தாக்கப்பட்டது. இதில் ஒருவர் காயமடைந்தார்; 8 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
மஜத எம்எல்ஏ நாகன கெளடாவின் மகன் சரண்கெளடாவுடன் பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா பேரம் பேசி பாஜகவுக்கு வருமாறு அழைப்பு
விடுத்தது தொடர்பான ஒலிப்பதிவு துணுக்கு கர்நாடக அரசியலில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. ஒலிப்பதிவுத் துணுக்கில் எடியூரப்பா தவிர பாஜக எம்எல்ஏக்கள் சிவனகெளடாநாயக், பிரீத்தம்கெளடா ஆகியோர் சரண் கெளடாவுடன் தொலைபேசியில் உரையாடும் முழுமையான ஒலித்துணுக்கு புதன்கிழமை பகிரங்கமானது. அந்த ஒலிப்பதிவுத் துணுக்கில் பிரீத்தம் கெளடா, சரண்கெளடாவிடம்,"தேவெ கெளடாவுக்கு வயதாகிவிட்டது, குமாரசாமிக்கு உடல்நிலை சரியில்லை. இவர்கள் இரண்டுபேரும் சென்றபிறகு, மஜத அழிந்துபோகும். எனவே, பாஜகவில் சேர்ந்தால் அடுத்த 40 ஆண்டுகளுக்கு நல்ல அரசியல் எதிர்காலம் உள்ளது' என்று கூறுகிறார்.
இது மஜதவினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, ஹாசன் தொகுதி எம்எல்ஏவாக இருக்கும் பிரீத்தம் கெளடாவின் இல்லத்தின் மீது புதன்கிழமை கல்வீசி தாக்கப்பட்டது. இதில் வீட்டில் இருந்த பாஜக தொண்டர் ராகுல் மீது கல் பட்டு தலையில் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 8 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்கள். பிரீத்தம் கெளடாவின் தாக்குதலை பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கடுமையாகக் கண்டித்தனர்.