பாஜகவினரிடம் இருந்து ரூ.50 கோடி பணம் வாங்கவில்லை என்று சின்சோளி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ உமேஷ் ஜாதவ் தெரிவித்தார்.
இது குறித்து கலபுர்கி அருகேயுள்ள வாடி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: நான் காங்கிரஸ் கட்சியைவிட்டு விலகி பாஜகவில் சேருவதாக ஒருசிலர் புரளி கிளப்பிவிட்டனர். மேலும் நான் பாஜகவினரிடம் இருந்து ரூ.50 கோடி பணத்தைப் பெற்றுக் கொண்டதாகவும் ஒருசிலர் பொய்யான தகவலை பரப்பி வருகிறார்கள். பணத்துக்காக என்னை நான் விற்றுக்கொள்ள விரும்பவில்லை. பாஜகவினரிடம் இருந்து நான் ரூ.50 கோடி வாங்கியிருப்பது உண்மையானால், எனக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் அதை ஏற்றுக்கொள்ளத் தயார்.
எனது தொகுதியில் எந்தவிதமான வளர்ச்சிப் பணிகளும் நடக்கவில்லை. இதனால் காங்கிரஸ் தலைவர்கள் மீது அதிருப்தி அடைந்திருப்பது உண்மைதான். மக்கள் கொடுத்திருக்கும் பதவியை, அம் மக்களின் மேம்பாட்டுக்காக பயன்படுத்த வேண்டுமென்பதே எனது நோக்கம். கடந்த 5 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் ஒருசில வளர்ச்சிப் பணிகளை தொகுதியில் செய்துள்ளேன். ஆனால், கூட்டணி ஆட்சி பொறுப்புக்கு வந்தபிறகு, வளர்ச்சிப் பணிகள் எதுவும் நடக்கவில்லை. கூட்டணி அரசின் அலட்சியத்தால் மனம் வேதனை அடைந்துள்ளேன் என்றார் அவர்.